பக்கம் எண் :

                   
குணமாலையார் இலம்பகம் 639 

   நச்சினார்க்கினியர் 1113 - முதல் மூன்று செய்யுட்களையும் ஒரு தொடராக்கித் தன்னை வாள்வாய்க் கீண்டிடலுற்று நின்ற கட்டியங்காரன் தலை நிலத்ததாம் என்பதனை உட்கொண்டு, அழும் உறவினரை நோக்கித் தன்னை ஒருவரும் ஒன்றுஞ் செய்ய முடியாதென்பதை விளக்கிப் புலம்புகொண்ட ழேற்க என்றான் என முடிப்பர்.

( 265 )
1116 நீரகம் பொதிந்த மேக
  நீனிற நெடுநல் யானைப்
போரகத் தழலும் வாட்கைப்
  பொன்னெடுங் குன்ற மன்னா
னார்கலி யாணர் மூதூ
  ரழுதுபின் செல்லச் செல்வான்
சீருறு சிலம்பி நூலாற்
  சிமிழ்ப்புண்ட சிங்க மொத்தான்.

   (இ - ள்.) நீரகம் பொதிந்த மேகம் நீல்நிற நெடுநல் யானை - நீரைத் தன்னிடத்தே கொண்ட முகில் போன்ற கருநிறமுடைய பெரிய களிற்றையும் போரகத்து அழலும் வாள்கை - போரிலே கனலும் வாளேந்திய கையையுமுடைய; பொன் நெடுங்குன்றம் அன்னான் - பொன்னாலான பெரிய மலையைப் போன்ற சீவகன் ; ஆர்கலி யாணர் மூதூர் அழுதுபின் செல்லச் செல்வான் - ஆரவாரத்தையும் புதுவருவாயையுமுடைய பழம்பதியிலுள்ளார் அழுதவாறே பின்வரச் செல்கின்றவன்; சீருறு சிலம்பி நூலால் சிமிழ்ப்புண்ட சிங்கம் ஒத்தான் - சிறப்புற்ற சிலம்பியின் நூலினாற் சிக்குண்ட சிங்கம் போன்றான்.

 

   (வி - ம்.) 'நூல், வீரர்க்குவமை' என்பர் நச்சினார்க்கினியர். மேலும்'புதல் மறைந்து வேட்டுவன் புட்சிமிழ்த் தற்று' (குறள். 274) என்றாற்போலக் கொள்க' என்று உவமையுங் கூறுவர்.

( 266 )
1117 மன்னர்தம் வெகுளி வெந்தீ
  மணிமுகில் காண மின்னிப்
பொன்மழை பொழியி னந்து
  மன்றெனிற் புகைந்து பொங்கித்
துன்னினார் தம்மை யெல்லாஞ்
  சுட்டிடு மென்று செம்பொன்
பன்னிரு கோடி யுய்த்துக்
  கந்துகன் பணிந்து சொன்னான்.

   (இ - ள்.) மன்னர்தம் வெகுளி வெந்தீ - அரசருடைய வெகுளியாகிய கொடிய நெருப்பு ; மணிமுகில் காணம் மின்னி -