பக்கம் எண் :

                 
குணமாலையார் இலம்பகம் 646 

1127 ஆறெலாங் கடலுள் வைகு
  மருந்தவத் திறைவ னூலுள்
வேறெலாப் பொருளும் வைகும்
  விழுத்தவ வறிதி நீயே
யூறிலா வுணர்வி னோக்கி
  யுரைமதி யெவன்கொன் மக்கட்
பேறிலா ளல்லள் பெற்ற
  வுயிர்சென்று பிறக்கு மென்றேன்.

   (இ - ள்.) விழுத்தவ! - சிறந்த தவமுடையானே!; ஆறு எலாம் கடலுள் வைகும் - ஆறுகள் யாவும் கடலிலே தங்கும் (அதுபோல) ; அருந்தவத்து இறைவன் நூலுள் வேறு எலாப் பொருளும் வைகும் - அரிய தவத்தினையுடைய அருகன் ஆகமத்திலே வேறு வேறுபட்ட எல்லா நூல்களின் பொருளும் தங்கும் ; நீயே அறிதி - நீயே அப் பொருள்களை அறிவாய்; ஊறு இலா உணர்வின் நோக்கி உரைமதி - கெடுதியில்லா அறிவுடன் ஆராய்ந்து கூறுக; மக்கள்பேறு இலாள் அல்லள் பெற்ற உயிர் எவன்கொல் சென்று பிறக்கும் ? என்றேன் - குழந்தைப் பேறில்லாதவள் அல்லள் ஆகிய இவள் பெற்ற உயிர் எங்கே சென்று பிறக்கும் என்றேன்.

 

   (வி - ம்.) 'இவள் மக்கட் பேறில்லாதவளல்லள் ; பெற்ற மக்களுயிர் மற்றோரிடத்தே சென்று பிறக்கும் ; இனிப் பிள்ளை எத்தன் மைத்து?” என்று பொருளுரைப்பர் நச்சினார்க்கினியர். அருகனாமத்துள் எல்லாம் அடங்குதலின் அதனையறிந்த நீ கணித நிலையும் அறிவாய் என்ற கருத்துடன் இங்ஙனம் வினவினான்.

 

   கரகம் - கமண்டலம். தூய்நீர் மணிநீர் வாசநீர் நன்னீர் எனத் தனித்தனி கூட்டுக. தோளி : முன்னிலைப்புறமொழி ; நீ என்பது பொருள். விழுத்தவன் - சிறந்த தவத்தையுடையவன். நியமம் - ஒழுக்கமுறைமை.

( 277 )
1128 வம்பவிழ் கோதை தந்த
  வான்றுவர்க் காயை வீழ்த்தோர்
செம்பழுக் காயை வாங்கித்
  திருநிலத் தெடுத்துக் கொண்டாங்
கம்பழ நீண்ட வாட்க
  ணலமரு மணிசெ யம்பூங்
கொம்படு நுசுப்பி னாய்க்குத்
  தந்தனென் பேணிக் கொண்டாய்.