பக்கம் எண் :

பதுமையார் இலம்பகம் 689 

1206 அண்ணன்மே லரிவையர் கண்ணின் மொய்த்தவண்
மண்ணின்மேன் மாந்தர்கண் மொய்க்கும் வாவியை
யெண்ணமொன் றின்றியே யிடத்திட் டேகினாற்
றுண்ணெனச் சிலையவர் தொழுது காண்பவே

   (இ - ள்.) அண்ணல்மேல் அரிவையர் கண்ணின் மொய்த்து - அண்ணலாகிய நின்மேல் அரிவையர் கண்கள் மொய்க்குமாறு போல நெருங்கி; மண்ணின் மேல் மாந்தர்கள் அவண் மொய்க்கும் வாவியை - நிலவுலகிலுள்ள மக்கள் அவ்விடத்தை மொய்க்கும் அக் குளங்களை; இடத்து இட்டு எண்ணம் ஒன்று இன்றியே ஏகினால் - இடப்பக்கத்தே விட்டு அவற்றைக் கொள்ள வேண்டுமென்னும் நினைவு சிறிதும் இல்லாமலே போனால்; சிலையவர் துண் எனத் தொழுது காண்ப - அச் சிலைவர் துணுக்கென மொய்த்துத் தொழுது காண்பார்கள்.

   (வி - ம்.) 'நல்வினையுடையோரெனத் தொழுது காண்பர்' என்பர் நச்சினார்க்கினியர். ஆகவே, அவ்வாவிகட்கு இடமே செல்க என்றான்.

( 41 )
1207 பாடல்வண் டியாழ்செயும் பசும்பொற் கிண்கிணித்
தோடலர் கோதைமின் றுளும்பு மேகலை
யாடிய கூத்தித னசைந்த சாயல்போன்
றூடுபோக் கினியதங் கோரைங் காதமே

   (இ - ள்.) பாடல் வண்டு யாழ் செயும் அங்கு ஓர் ஐங்காதம் - பாடலையுடைய வண்டுகள் யாழென ஒலிக்கும் அவ்விடத்தே ஐங்காத வழியளவும்; பசும்பொன் கிண்கிணி - பசும்பொன்னாலான கிண்கிணியும்; தோடு அலர் கோதை - இதழ்விரிந்த மலர்க் கோதையும்; மின் துளும்பும் மேகலை - ஒளி ததும்பும் மேகலையும் உடைய; ஆடிய கூத்தி தன் அசைந்த சாயல்போல் - ஆடிய கூத்தியினுடைய இளைத்த தோற்றம் போல; ஊடுபோக்கு இனியது - இடையே செல்வதற்கு இயனிமையைத் தருவதாக இருக்கும்.

   (வி - ம்.) அகப்பட்டார் நீங்குதல் அரிதாய் இருக்கும் என்பர் நச்சினார்க்கினியர்.

( 42 )
1208 கோதைவீழ்ந் ததுவென முல்லை கத்திகைப்
போதுவேய்ந் தினமலர் பொழிந்து கற்புடை
மாதரார் மனமெனக் கிடந்த செந்நெறி
தாதின்மே னடந்ததோர் தன்மைத் தென்பவே

   (இ - ள்.) கோதை வீழ்ந்தது என முல்லை கத்திகைப்போது வேய்ந்து - (மற்றும்) மாலை வீழ்ந்தது என்னும்படி முல்லை