பக்கம் எண் :

பதுமையார் இலம்பகம் 719 

வேறு

1263 கைவளர் கரும்புடைக் கடவு ளாமெனி
னெய்கணை சிலையினோ டிவன்க ணில்லையான்
மெய்வகை யியக்கருள் வேந்த னாகுமென்
றையமுற் றெவர்களு மமர்ந்து நோக்கினார்

   (இ - ள்.) கை வளர் கரும்பு உடைக் கடவுளாம் எனின் - கையிலே வளரும் கரும்புடைய காமன் என்றால்; எய் கணை சிலையினோடு இவன்கண் இல்லை - எய்யும் மலரம்பும் கரும்பு வில்லும் இவனிடம் இல்லை; மெய்வகை இயக்கருள் வேந்தன் ஆகும் என்று - வடிவின் திறனை நோக்கின் இயக்கரின் அரசனாவான் என்று; எவர்களும் ஐயம் உற்று அமர்ந்து நோக்கினார் - எல்லோரும் ஐயம் உற்றுப் பொருந்தப் பார்த்தனர்.

   (வி - ம்.) 'கை' என்பதற்கு 'ஒழுக்கம்' எனப் பொருள் கொண்டு 'இல்வாழ்க்கை வளர்தற்குக் காரணமான கரும்பு' என்பர் நச்சினார்க்கினியர்.

( 98 )

வேறு

1264 மந்திரம் மறந்து வீழ்ந்து.
   மா நிலத்து இயங்கு கின்ற
அந்தர குமரன் என்று ஆங்கு
   யாவரும் அமர்ந்து நோக்கி
இந்திர திருவற்கு உய்த்தார்க்கு
   இறைவனும் எதிர் கொண்டு ஓம்பி
மைந்தனை மகிழ்வ கூறி
   மைத்துனத் தோழன் என்றான்

   (இ - ள்.) மந்திரம் மறந்துமாநிலத்து வீழ்ந்து இயங்குகின்ற - வானிற் செல்லும் மறைமொழி மறந்து நிலமிசை விழுந்து உலவுகின்ற; அந்தரகுமரன் என்று ஆங்கு யாவரும் அமர்ந்து நோக்கி - வானுறுகுமரன் என்று அங்குள்ள எல்லோரும் பொருந்திப் பார்த்து; இந்திர திருவற்கு உய்த்தார்க்கு - இந்திரனைப்போன்ற செல்வமுடைய அரசகுமரனிடம் சேர்த்தவர்க்கு; இறைவனும் எதிர்கொண்டு ஓம்பி - அரசகுமரனும் எதிர்கொண்டு பேணி; மைந்தனை மகிழ்வ கூறி - அவன் மகிழுமாறு பேசி; மைத்துனத் தோழன் என்றான் - நீ என் விளையாட்டுத் தோழன் என்றுரைத்தான்.

   (வி - ம்.) அந்தரகுமரன் : வானவரில் ஒரு பிரிவு. இளவரசாதலின் 'அரசன்' என்றும் (1262) 'இறைவன்' என்றும் கூறினார்.

   மந்திரம் - வான்வழிச் செல்லுதற்குரிய மறைமொழி. அந்தரகுமரன் - தேவகுமரன். அமர்ந்து - விரும்பி. இந்திரதிருவன் - இந்திரன்போன்று செல்வமிக்க உலோகபாலன். மைந்தனை - சீவகனை. மைத்துன முறைமையினையுடைய தோழன். மகிழ்வ - மகிழத்தக்க சொற்கள். இது வினையாலணையும் பெயர்.

( 99 )