பக்கம் எண் :

பதுமையார் இலம்பகம் 738 

தன் வாள்தடம் கண்களால் - காதலையுடைய தன் வாளனைய பெரிய கண்களாலே; உற்ற நோக்கம் உறாதது ஓர் நோக்கினில் - தான் அவன்பாற் கொண்ட அன்புற்ற நோக்கத்தை மற்றவர் ஐயுறாத ஒரு நோக்கத்தினாலே; வள்ளலைச் சுற்றிச் சோர்வு இன்றி யாத்திட்டாள் - சீவகனைச் சூழ்ந்து தப்பாமற் கட்டினாள்.

   (வி - ம்.) அற்றமில் அமிர்து - ஒருவன் கைப்படா அமிழ்தம். உறாதநோக்கு, ஏதின்மைபட நோக்கும் நோக்கமுமாம். அந்நோக்கத்தால் அவன் கட்டுண்டலால் யாத்திட்டாள் என்றார். மாதர் - காதல்.

( 130 )

வேறு

1296 விஞ்சையர் வீர னென்பார்
   விண்ணவர் குமர னென்பா
ரெஞ்சிய வுயிரை மீட்டா
   னிவனலா லில்லை யென்பார்
மஞ்சுசூ ழிஞ்சி மூதூர்
   மாமுடிக் குரிசி னாளை
நஞ்சுசூழ் வேலி னாற்கே
   நங்கையைக் கொடுக்கு மென்பார்.

   (இ - ள்.) விஞ்சையர் வீரன் என்பார் - (இவன்) வித்தியாதர வீரன் என்பார்; விண்ணவர் குமரன் என்பார் - வானவர் மகன் என்பார்; எஞ்சிய உயிரை மீட்டான் இவன் அலால் இல்லை என்பார் - போன உயிரைத் திரும்பக் கொணர்ந்தவன் இவனல்லது வேறொருவன் இல்லை என்பார்; மஞ்சுசூழ் இஞ்சி மூதூர் மாமுடிக் குரிசில் - முகில் தவழும் மதிலையுடைய இப்பழம்பதியின் முடிமன்னன்; நஞ்சுசூழ் வேலினாற்கே நாளை நங்கையைக் கொடுக்கும் என்பார் - இந்த நஞ்சு கலந்த வேலினானுக்கே நாளைக்கு இந்த நங்கையை நல்குவான் என்பார்.

   (வி - ம்.) விஞ்சையர் - வித்தியாதரர். எஞ்சிய - இறந்த. மஞ்சு - முகில். இஞ்சி - மதில். மூதூர் - பழைமையான ஊர், சந்திராபம்.

( 131 )
1297 விளங்கொளி விசும்பில் வெண்கோட்
   டிளம்பிறை சூழ்ந்த மின்போல்
வளங்கெழு வடத்தைச் சூழ்ந்து
   வான்பொனாண் டிளைப்பச் சேந்த
விளங்கதிர் முலைக டம்மா
   லிவனைமார் பெழுதி வைகிற்
றுளங்குபெண் பிறப்புந் தோழி
   யினிதெனச் சொல்லி நிற்பார்.