பக்கம் எண் :

பதுமையார் இலம்பகம் 772 

   (இ - ள்.) தன் ஒப்பாரை இல்லானைத் தலைச் சென்று - தனக்கு நிகராவார் இல்லாதவனிடத்தே சென்று; என் பொன் ஒப்பாளொடும் போக என - என் திருவனையாளொடும் போவாயாக என்று; போகடாய் துன்னித் தந்திலை நீ என - அவனைச் செல்ல விடாயாய் என்னிடத்தே பொருந்தக் கொணர்ந்திலை நீ என்று; தூச் சிறை அன்னப் பேடையோடு ஆற்றக் கழறினாள் - தூய சிறகுகளையுடைய அன்னப் பேடையுடன் மிகவும் சினந்துரைத்தாள்.

 

   (வி - ம்.) போக விடாய் : போகடாய் என விகாரப்பட்டது.

 

   தன்னொப்பாரையில்லான் : சீவகன். பொன் : திருமகள். தூச்சிறை - வெள்ளை நிறமுடைய சிறகுமாம். ஆற்ற - மிகவும். கழறுதல் - இடித்துரைத்தல்.

( 200 )

1366 மையில் வாணெடுங் கண்வள ராதன
மெய்யெ லாமுடை யாய்மெய்ம்மை காண்டிநீ
யையன் சென்றுழிக் கூறுகென் றாய்மயில்
கையி னாற்றொழு தாள்கயற் கண்ணினாள்.

   (இ - ள்.) வளராதன - துயிலாதனவாகிய; மை இல்வாள் நெடுங்கண் - மைதீட்டப் பெறாத ஒளியுறும் நீண்ட கண்களை; மெய்யெலாம் உடையாய் - உடலெலாம் உடைய மயிலே!; மெய்ம்மை காண்டி நீ - உண்மை உணர்வாய் நீ; ஐயன் சென்றுழிக் கூறுக என்று - என் தலைவன் சென்ற இடத்தைக் கூறுக என்று; கயல் கண்ணினாள் - கயலனைய கண்ணினாள்; ஆய் மயில் கையினால் தொழுதாள் - ஆராய்ந்த மயிலைக் கைகளால் தொழுதாள்.

 

   (வி - ம்.) கண் : பீலிக் கண். துயிலாத கண்களையுடைமையின், அவனைக் காட்டும் என்று தொழுதாள். வாள் என அடை கூறினார் கண்ணென்பதற் கேற்ப.

 

   வளராதன மையில் வாள் நெடுங்கண் மெய்யெலாம் உடையாய் என மாறுக. கண் உடையாய் என்றது மெய்ம்மை காண்டற்குக் குறிப்பேது வாய் நின்றது. ஐயன் : சீவகன். ஆய் - அழகிய. கண்ணினாள் : பதுமை. இச்செய்யுளோடு, ”ஓடா நின்ற களிமயிலே ...... ஆயிரங் கண்ணுடையாய்க்கு ஒளிக்குமாறுண்டோ” எனவரும் கம்பர் செய்யுளை (பம்பை - 27) ஒப்பு நோக்குக.

( 201 )
1367 வளர்த்த செம்மையை வாலியை வான்பொருள்
விளக்கு வாய்விளக் கேவிளக் காயிவ
ணளித்த காதலொ டாடுமென் னாருயி
ரொளித்த தெங்கென வொண்சுடர் நண்ணினாள்.