பக்கம் எண் :

பதுமையார் இலம்பகம் 788 

1396 வடிமலர்க் காவி னன்று
  வண்டளிர்ப் பிண்டி நீழன்
முடிபொருள் பறவை கூற
  முற்றிழை நின்னை நோக்கிக்
கடியதோர் கௌவை செய்யுங்
  கட்டெயிற் றரவி னென்றேன்
கொடியனாய் பிழைப்புக் கூறேன்
  குழையலென் றெடுத்துக் கொண்டாள்.

   (இ - ள்.) முற்றிழை! - முற்றிய இழைகளையுடையாய்!; அன்று வடிமலர்க் காவின் வண்தளிர்ப் பிண்டி நீழல் - அன்றைக்கு ஆராயும் மலர்ப் பொழிலிலே வளவிய தளிரையுடைய பிண்டியின் நீழலிலே; பறவை முடிபொருள் கூற - அப்பறவை முடியும் பொருளைக் கூறுதலின்; நின்னை நோக்கிக் கட்டு எயிற்று அரவின் கடியது ஓர் கௌவை செய்யும் என்றேன் - உன்னைப் பார்த்து இக் கூற்றுக் கட்டிய நஞ்சுடைய அரவினாலே கொடியதாகிய ஒரு துன்பத்தை உண்டாக்குவதைக் காட்டும் என்றேன்; கொடியனாய்! - கொடி போன்றவளே!; பிழைப்புக் கூறேன் - தவறுரையேன்; குழையல் என்று எடுத்துக்கொண்டாள் - வருந்தற்க என்று தழுவியெடுத்துக் கொண்டாள்.

 

   (வி - ம்.) வடிமலர்க்கா : வினைத்தொகை; தழைத்துத் தாழ்ந்த காவுமாம். பிண்டி - அசோகமரம். 'பறவை முடிபொருள் கூறக் கடியதோர் கௌவை செய்யும் என்றேன்' என்றது மேலைச் செய்யுளில் தாரினான் கைப்படும் என்றதற்கு எடுத்துக்காட்டு.

( 231 )
1397 அலங்கலுங் குழலுந் தோழி
   யங்கையி னடைச்சி யம்பூம்
பொலங்கலக் கொடிய னாடன்
  கண்பொழி கலுழி யொற்றிக்
கலந்தகி னாறு மல்குற்
   கவான்மிசைக் கொண்டி ருந்தாள்
புலர்ந்தது பொழுது நல்லா
  ணெஞ்சமும் புலர்ந்த தன்றே.

   (இ - ள்.) தோழி - தோழியானவள்; அம் கையின் - அழகிய தன் கையினால்; அம் பொலம் கலம் பூங்கொடியன்னாள் தன் - அழகிய பொன்னாலாகிய கலம் அணிந்த பூங்கொடி போன்றவளின்; அலங்கலும் குழலும் அடைச்சி - மாலையையும் குழலையும் செருகி; கண்பொழி கலுழி ஒற்றி - கண்ணிலிருந்து வடியும்