பக்கம் எண் :

பதுமையார் இலம்பகம் 790 

பதுமையின் நற்றாய்; முல்லை அம் குழலினாய் - முல்லைப்போது அணிந்த கூந்தலாய்!; நின்முலை முதற்கொழுநன் - நின் கொங்கையிற் றோய்ந்த கணவன்; மேல் நாள் சொல்லியும் அறிவது உண்டோ என - முன்னாளிலே தன் பிரிவு தோன்றச்சொல்லி நீ அறிந்தது உண்டோ? என்று வினவ; மெல்லியள் குழைந்து உருகி நைந்து - பதுமை அதுகேட்டு நெகிழ்ந்து உருகி வருந்தி; கங்குல் சொல்லிற்று இற்று என மிழற்றுகின்றாள் - இரவு கூறியது இஃது என்று கூறுகின்றாள்.

 

   (வி - ம்.) சில் அரி - சிலவாகிய பரல்கள். நற்றாய் : திலோத்தமை. கற்புக் கடம்பூண்டமை தோன்ற 'முல்லையங் குழலினாய், என்று விளித்தாள். முலைக்கு முதல்வனாகிய கொழுநன் என்க. கொழுநன் - கணவன். மெல்லியல் : பதுமை. இற்று - இத்தன்மைத்து.

( 234 )

வேறு

 
1400 வினைக்குஞ் செய்பொருட் கும்வெயில் வெஞ்சுர
நினைத்து நீங்குத லாண்கட னீங்கினாற்
கனைத்து வண்டுணுங் கோதையர் தங்கடன்
மனைக்கண் வைகுதன் மாண்பொ டெனச்சொனான்.

   (இ - ள்.) நினைத்து - தன் மனைவியை நினைத்து வருத்தினாலும்; வினைக்கும் செய்பொருட்கும் - போர்த்தொழிலுக்கும் ஈட்டும் பொருட்கும்; வெயில் வெஞ்சுரம் - கோடையிலே கொடிய காட்டு நெறியிலே; நீங்குதல் ஆண் கடன் - பிரிந்து செல்லுதல் ஆடவர் தொழில்; நீங்கினால் - அவ்வாறு நீங்கினால்; கனைத்து வண்டு உணும் கோதையர் தம் கடன் - முரன்று வண்டுகள் தேனைப் பருகும் மாலையணிந்த மனைவியர் தொழில்; மாண்பொடு மனைக்கண் வைகுதல் எனச் சொனான் - இறந்து படாமல் இல்லிலே தங்கியிருந்தலாகும் என்று கூறினான்.

 

   (வி - ம்.) வினை : ஈண்டுப் போர்த்தொழில். செய்பொருள் : வினைத்தொகை. ஆண்கடன் : ஆடவனுக்குரிய கடமை. கனைத்து - முரன்று. கோதையர் - ஈண்டு மகளிர் என்னும் பொருட்டு. வைகுதல் - ஈண்டு ஆற்றியிருத்தல் என்பதுபட நின்றது. இச்செய்யுட் கருத்தோடு.

 
  ”ஆண்கடன் அகறல் அதுநோன் றொழுகுதல்  
  மாண்பொடு புணர்ந்த மாசறு திருநுதற்  
  கற்புடை மகளிர் கடன்.” (பெருங். 3. 7 : 7 - 9)  

   எனவரும் பெருங்கதைப் பகுதியை ஒப்புக் காண்க.

( 235 )
1401 விரைசெய் தாமரை மேல்விளை யாடிய
வரைச வன்ன மமர்ந்துள வாயினு
நிரைசெய் நீல நினைப்பில வென்றனன்
வரைசெய் கோல மணங்கமழ் மார்பினான்.