பக்கம் எண் :

பதுமையார் இலம்பகம் 792 

   (வி - ம்.) 'நீலம் அமர்ந்துளவாயினும்' என்பதன் கருத்தைக் கூறிற்றிலள் பதுமை கேட்பின் இறந்துபடுவள் என்று கருதி. 'நின்னின் நீங்கினன்' என்றும் பாடம்.

( 238 )

வேறு

 
1404 சொரிபனி முருக்க நைந்து
  சுடர்முகம் பெற்ற போதே
பரிவுறு நலத்த வன்றே
  பங்கய மன்ன தேபோல்
வரிவளைத் தோளி கேள்வன்
  வருமென வலித்த சொல்லாற்
றிருநலம் பிறந்து சொன்னா
  டேனினு மினிய சொல்லாள்.

   (இ - ள்.) சொரி பனி முருக்க நைந்து - பெய்யும் பனி வெதுப்புதலிற் கெட்டு; சுடர்முகம் பெற்றபோதே - ஞாயிறு தோன்றும் நிலைமையை அடைந்தபொழுதே; பங்கயம் பரிவுறும் நலத்த அன்றே - தாமரை அன்புறும் பண்பினையுடையவன்றே?; அன்னதேபோல் - அதனைப் போலவே; வரிவளைத் தோளி தேனினும் இனிய சொல்லாள் - வரி வளையணிந்த தோளியாகிய தேனினும் இனிமையான சொல்லையுடையவள்; கேள்வன் வரும் என வலித்த சொல்லால் - கணவன் வருவான் என்று தாய் கூறிய உறுதிமொழியால்; திருநலம் பிறந்து சொன்னாள் - அழகிய நலத்தைப் பெற்று ஒருமொழி கூறினாள்.

 

   (வி - ம்.) சொரிபனி : வினைத்தொகை. முருக்குதல் - அழித்தல். சுடர் - ஞாயிறு. பங்கயம் - தாமரை. தோளி : பதுமை. வலித்தசொல் - துணிந்துரைத்த சொல்.

( 239 )
1405 நஞ்சினை யமுத மென்று நக்கினு மமுத மாகா
தஞ்சிறைக் கலாப மஞ்ஞை யணங்கர வட்ட தேனு
மஞ்சிறைக் கலுழ னாகு மாட்சியொன் றானு மின்றே
வஞ்சனுக் கினைய நீரேன் வாடுவ தென்னை யென்றாள்.

   (இ - ள்.) நஞ்சினை அமுதம் என்று நக்கினும் அமுதம் ஆகாது - கண்ணுக்கினிய தோற்றத்தால் நஞ்சை அமுதென்று எண்ணி நக்கினாலும் அமுதம் ஆகாது; அம்சிறைக் கலாப மஞ்ஞை அணங்கு அரவு அட்டதேனும் - அழகிய சிறகினையும் கலவத்தையும் உடைய மயில் வருத்தம் பாம்பைக் கொல்லுந் தகையதேனும்; அம் சிறைக் கலுழன் ஆகும் மாட்சி ஒன்றானும் இன்று - அழகிய சிறகினையுடைய கருடனைப்போலத் தொலைவி