பக்கம் எண் :

கேமசரியார் இலம்பகம் 812 

1435 நோய்முதிர் குரங்கு போல
  நுகர்ச்சிநீர் நோக்கல் வேண்டா
காய்முதிர் கனியி னூழ்த்து
  வீழுமிவ் வியாக்கை யின்னே
வேய்முதிர் வனத்தின் வென்றா
  னுருவொடு விளங்க நோற்றுப்
போய்முதிர் துறக்கத் தின்பம்
  பருகுவ புரிமி னென்றான்.

   (இ - ள்.) நோய்முதிர் குரங்குபோல நுகர்ச்சி நீர் நோக்கல் வேண்டா - காமநோயினால் முதிர்ந்த குரங்கைப்போல நீவிர் காம நுகர்ச்சியை நோக்குதல் வேண்டா; காய் முதிர் கனியின் ஊழ்த்து இவ் யாக்கை வீழும் - காய் முற்றிப் பழமாகி விழுவதைப் போல, முதிர்ச்சி அடைந்து இவ்வுடம்பு விழுந்து விடும்; வேய் முதிர் வனத்தின் - மூங்கில் முற்றிய காட்டிலே; வென்றான் உருவொடு விளங்க இன்னே நோற்றுப்போய் - காமனை வென்ற அருகப்பெருமான் உருவத்துடன் நின்று விளக்கமுற இப்பொழுதே நோற்றுச் சென்று; முதிர் துறக்கத்து இன்பம் பருகுதலைப் புரிமின் என்றான் - முற்றிய துறக்க வின்பத்தை நுகர்தலை விரும்புமின் என்று சீவகன் செப்பினான்.

 

   (வி - ம்.) கொண்டது விடாமையானும் குரங்கு உவமையாயிற்று. 'வேண்டின் உண்டாகத் துறக்க' என்பான் இன்னே என்றான். இன்னே என்பதனை நோற்றுப்போய் என்பதனோடு கூட்டுக. வென்றான் : பெயர்.

( 24 )
1436 மெய்வகை தெரிதன் ஞானம்
  விளங்கிய பொருள்க டம்மைப்
பொய்வகை யின்றித் தேறல்
  காட்சியைம் பொறியும் வாட்டி
யுய்வகை யுயிரைத் தேயா
  தொழுகுத லொழுக்க மூன்று
மிவ்வகை நிறைந்த போழ்தே
   யிருவினை கழியு மென்றான்.

   (இ - ள்.) ஞானம் மெய்வகை தெரிதல் - ஞானமாவது உண்மை அறிதல்; காட்சி விளங்கிய பொருள்கள் தம்மைப் பொய்வகை இன்றித் தேறல் - காட்சியாவது அவ்வாறு அறிந்த பொருள்களைப் பொய்யின்றாகத் தெளிதல்; ஒழுக்கம் ஐம்பொறியும் வாட்டி உய்வகை உயிரைத் தேயாது ஒழுகுதல் - ஒழுக்கமாவது ஐம்பொறிகளையும் ஐம்புலன்களிற் செல்லாமற் கெடுத்து