பக்கம் எண் :

கேமசரியார் இலம்பகம் 822 

   (இ - ள்.) சேயிழை கணவன் ஆகும் திருமகன் திறத்து - கேமசரியின் கணவனாகிய திருமகனைக் காணுதற்கு; நாளும் ஆயிரத்தெட்டு நேர்ந்த ஆரமுது அடிசில் ஊட்டி - வைகலும் ஆயிரத்தெண்மருக்கு ஆக்கிய ஆரமுது போலும் சோற்றை ஊட்ட; ஏயின வகையினாலே அப் பூங்கொடிச் சாயலாட்கு - பொருந்திய வகையாலே அப் பூங்கொடிபோலும் மென்மையாட்கு; ஆறிரண்டு எல்லை ஆண்டு போயின என்ப - பன்னிரண்டு ஆகிய எல்லையையுடைய ஆண்டுகள் கழிந்தன என்க.

 

   (வி - ம்.) சேயிழை : அன்மொழித் தொகை. அமுதடிசில் : உவமத்தொகை.

 

   'திருமகன் திறத்து' என்பது, 'என்றிறத்து அவலங்கொள்ளல்' என்பதுபோல (புறநா. 253) பொருட்டு என்னும் பொருளில் வந்தது. ஊட்டி - ஊட்ட : எச்சத்திரிபு.

( 42 )
1454 முருக்கிதழ் குலிக மூட்டி
  வைத்தன முறுவற் செவ்வாய்த்
திருக்கவி னிறைந்த வெங்கட்
  பணைமுலைத் தேம்பெய் கோதைப்
புரிக்குழற் பொன்செய் பைம்பூட்
  புனையிழை கோல நோக்கித்
தரிக்கிலா துருகி நையுந்
  தடமலர்க் கோதை நற்றாய்.

   (இ - ள்.) முருக்கிதழ் குலிகம் ஊட்டி வைத்த அனமுறுவல் செவ்வாய் - முருக்கமலரின் இதழை இங்குலிகத்தையும் ஊட்டி வைத்தாற்போன்ற, முறுவலையுடைய சிவந்த வாயையும்; திருக்கவின் நிறைந்த வெம்கண் பணைமுலை - திருமகளின் அழகு நிறைந்த விருப்பம் ஊட்டுங் கண்களையுடைய பருத்த முலைகளையும்; தேன் பெய் கோதை - தேன் பொருந்திய மலர்மாலையையும்; புரிக்குழல் - நெறித்த கூந்தலையும்; பொன்செய் பைம்பூண் - பொன்னாலான புத்தணியையும் உடைய; புனையிழை கோலம் நோக்கி - கேமசரியின் கோல முதிர்ச்சியைப் பார்த்து; தடமலர்க் கோதை நற்றாய் - பெரிய மலராலான மாலையினாளின அன்னை; தரிக்கிலாது உருகி நையும் - பொறாமல் வருந்துவாள்.

 

   (வி - ம்.) இயல்பாகவே சிவந்த முருக்க மலரின்மேல் இங்குலிகத்தையும் ஊட்டி வைத்தாற்போன்று நனிசிவந்த வாய் என்பார், முருக்கிதழ் குலிகம் ஊட்டிவைத்தன செவ்வாய் என்றார்.

 

   புனையிழை : அன்மொழித் தொகை; கேமசரி. இத்தகைய அழகினாட்கு இன்னும் கணவன் வாய்த்திலனே என்று நற்றாய் நோக்குந்தோறும் நைந்துருகினாள் என்பது கருத்து.

( 43 )