பக்கம் எண் :

கேமசரியார் இலம்பகம் 846 

1499 கொந்தழல் வேற்க ணாலென்
  னாவிகூட் டுண்ட கொம்பே
செந்தழை யலங்க லேந்திச்
  சீறடி பரவ வந்தே
னுய்ந்தினிப் பணிசெய் வேனோ
  வுடம் பொழித் தேகு வேனோ
பைந்தழை யல்குற் பாவாய்
  பணியெனப் பரவி னானே.

   (இ - ள்.) கொந்து அழல்வேற்கணால் என் ஆவி கூட்டுண்ட கொம்பே - எரியும் அழலையுடைய வேலனைய கண்களினால் என் உயிரைக் கொள்ளை கொண்ட மலர்க்கொம்பே!; செந்தழை அலங்கல் ஏந்திச் சீறடி பரவ வந்தேன்- செவ்விய தழையையும் மாலையையும் ஏந்தி நின் சிற்றடிகளை வணங்க வந்தேன்; இனி உய்ந்து பணிசெய்வேனோ - இனி உயிருடன் இருந்து நின் ஏவல் செய்யக்கடவேனோ?; உடம்பு ஒழித்து ஏகுவேனோ - இறந்து படக் கடவேனோ?; பைந்தழை அல்குல் பாவாய் - பசிய தழைகளை யுடுத்த அல்குலையுடைய பாவையே!; பணியெனப் பரவினான் - (இரண்டில் ஒன்றினை) அருளிச்செய்க என்று புகழ்ந்தான்.

 

   (வி - ம்.) துகிலும் மேகலையுஞ் சீர்பெறப் புனையுங் காலத்தும் பைந்தழை புனைதல் பழைமையின் குறப்புப்போலும். சீவகன் கிளியை ஒட்டப் பிரிந்தானாக, அவள் அப்பிரிவைப் பொறாது ஊடினாள். எனவே, புலவி தீர்க்கவேண்டியதாயிற்று.

 

   கொம்பு : ஆகுபெயர்; விளியேற்றது. நின்னுடைய வாயுடைய தென்னுடைய வாழ்வென்பான் பணி என்றான்.

( 88 )
1500 வீணையுஞ் குழலும் பாலு
  மமுதமுங் கரும்புந் தேனும்
பாணியாழ் கனியும் வென்ற
  பைங்கிளி மழலைத் தீஞ்சொல்
வாணிக மகளிர் தாமே
  வாணிகம் வல்ல ரென்னாப்
பூண்முலை பொதிர்ப்பப் புல்லிப்
  புனைநலம் பருகி னானே.

   (இ - ள்.) வீணையும் குழலும் பாலும் அமுதமும் கரும்புந்தேனும் பாணி யாழ் கனியும் வென்ற - வீணை குழல் யாழ் பால் அமுதம் கரும்பு தேன் இசையுறும் யாழ் கனி ஆகிய இவற்றை