பக்கம் எண் :

கேமசரியார் இலம்பகம் 851 

1507 அரந்தினப் பிறந்த பைம்பொ
  னரும்பிய முலையி னாளைக்
கரந்தவன் கங்கு னீங்கக்
  கதிர்வளை யணங்கு மென்றோள்
வரந்தரு தெய்வ மன்னாள்
  வைகிரு ளனந்த றேறிப்
பரந்தெலாத் திசையு நோக்கிப்
  பையவே பரிவு கொண்டாள்.

   (இ - ள்.) அரம் தினப் பிறந்த பைம்பொன் அரும்பிய முலையினாளை - அரத்தால் அராவுதலால் உண்டான புதிய பொன்னெனச் சுணங்கு பொருந்திய முலையாளை; கரந்தவன் கங்குல் நீங்க - நீங்கிய சீவகன் அங்ஙனம் இருளிலே போகாநிற்க; கதிர்வளை அணங்கும் மென்தோள் வரம்தரு தெய்வம் அன்னாள் - ஒளிரும் வளையணிவதால் மெலியும் மென்மையான தோளையுடைய, வரமளிக்குந் தெய்வத்தைப் போன்றவள்; வைகு இருள் அனந்தல் தேறி - தங்கிய இருளிலே தான் கண்ட கனவாலே துயில் மயக்கம் நீங்கி விழித்து; பரந்து எலாத்திசையும் நோக்கி - எல்லாத் திசையினும் பரவிப் பார்த்து; பையவே பரிவு கொண்டாள் - முறைபட வருத்தம் கொண்டாள்.

   (வி - ம்.) ஈண்டும் தன்கேள்வனைக் கனவினும் காணப் பெறாமையானே விழித்து என்னலும் பொருந்தும். பொன் என்றது அராவப்பட்ட பொற்சுண்ணத்தை; இது தேமலுக்கு உவமை.

   கணவற்கு நினைத்தன கொடுத்தலின் வரந்தரு தெய்வம்.

( 96 )
1508 திருமணி குயின்ற செம்பொற்
  றிருந்துபூங் கொம்ப னாடன்
கருமணிப் பாவை யன்னான்
  கரந்துழிக் காண்டல் செல்லா
ளெரிமணி விளக்க மாடத்
  திருளறு காறு மோடி
யருமணி யிழந்தோர் நாக
  மலமரு கின்ற தொத்தாள்.

   (இ - ள்.) திருமணி குயின்ற செம்பொன் திருந்து பூங்கொம்பனாள் - அழகிய மணிகளைப் பதித்த திருந்திய பொற்பூங்கொம்பு போன்றவள்; தன் கருமணிப் பாவை அன்னான் - தன் விழியிலுள்ள கருமணியின் பாவைபோன்ற கணவன்; கரந்துழிக் காண்டல் செல்லாள் - மறைந்த இடத்தைக் காணாளாய்; எரி