பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 885 

1560 வீழ்ந்து வெண்மழை தவழும்
  விண்ணுறு பெருவரை பெரும்பாம்
பூழ்ந்து தோலுரிப் பனபோ
  லொத்த மற்றவற் றருவி
தாழ்ந்து வீழ்ந்தவை முழவிற்
  றதும்பின மதுகரம் பாடச்
சூழ்ந்து மாமயி லாடி
  நாடகந் துளக்குறுத் தனவே.

   (இ - ள்.) வெண்மழை வீழ்ந்து தவழும் விண் உறு பெருவரை - வெள்ளிய முகில் படிந்து தவழும் வானுயர் பெருமலை; பெரும் பாம்பு ஊழ்ந்து தோல் உரிப்பன போல் ஒத்த - பெரிய பாம்பு கழன்று தோலுரிப்பன போலேயாய், அம் முகில் போன பிறகு அப் பாம்பை ஒத்தன; அவற்று அருவி தாழ்ந்து வீழ்ந்தவை முழவின் ததும்பின - அம்மலையினின்றும் அருவிகள் தாழ்ந்து வீழ்கின்றவை முழவு போல முழங்கின; மதுகரம் பாடச் சூழ்ந்து மாமயில் ஆடி நாடகம் துளக்கு உறுத்தன - (அம் முழக்கம் கேட்டு) வண்டுகள்பாட, வளைந்து மயில்கள் ஆடிப், பிறர் ஆடும் நாடகங்களை வருத்தம் உறுத்தின.

   (வி - ம்.) வெண்மழை வீழ்ந்து தவழும் என மாறுக. மழை: ஆகுபெயர்; முகில். ஊழ்ந்து - கழன்று. வெண்முகில் தவழும் மலை தோலுரிக்கும் பாம்பிற்குவமை. அருவி முழக்கத்திற்கு மத்தள முழக்கம் உவமை. மயில்களுக்குக் கூத்தியரும், வண்டுகட்குப் பாணரும் உவமைகள்.

( 4 )
1561 கருவி தேனெனத் தூங்குங்
  கதிரணி யிறுங்கொடு தினைசூழ்
பொருவில் யானையின் பழுப்போற்
  பொங்கு காய்க்குலை யவரை
யருவி யைவனங் கரும்பு
  மடக்கருங் கவைக்கதிர் வரகு
முருவ வெட்பய றுழுந்து
  மல்லவு மெல்லையின் றுளவே.

   (இ - ள்.) கருவி தேன் எனத் தூங்கும் கதிர் அணி இறுங்கொடு தினை சூழ் - கைத்தளமும் தேனடையும் என்னுமாறு தொங்குகின்ற கதிர்களை யுடைய சோளத்தையும் தினையையுஞ் சூழ்ந்த; பொருஇல் யானையின் பழுப்போல் பொங்கு காய்க்குலை அவரை - ஒப்பற்ற யானையின் விலா வெலும்பு போலும் மிகுதி