2519.‘குமரர்’! நீர் இவண் அடைந்து
     உதவு கொள்கை எளிதோ?
அமரர் யாவரொடும், எவ்
     உலகும் வந்த அளவே!
எமரின் யார் தவம் முயன்றவர்கள்?’
     என்று உருகினன்-
தமர் எலாம் வர, உவந்தனைய
     தன்மை முனிவன்.

    தமர் எலாம் வர உவந்தனைய -தம் சுற்றத்தார் யாவரும் வர அது
கண்டு மகிழ்ந்தாற் போல; தன்மை முனிவன் -மகிழ்ச்சி நிலை அடைந்த
அத்திரி முனிவர்; (இராமலக்குவரைக் கண்டு); ‘குமரர்! நீர் இவண்
அடைந்து உதவு கொள்கை -
தயரதன் மக்காள்! நீங்கள் இவ் விடத்தில்
வந்து பெரும்பேறடையஅருளிய (நீங்கள் இங்கு வந்தது) தன்மை; எளிதோ-
(எங்களுக்கு) கிடைத்தற்கு எளியதோ?; அமரர் யாவரொடும் எவ்வுலகும்
வந்த அளவே -
எல்லாத் தேவர்களோடும் எல்லா உலகங்களும் வந்த
தன்மையதே!; எமரின் - எங்களைவிட;யார் தவம் முயன்றவர்கள் -
யாரே தவ முயற்சியில் ஈடுபட்டவர்கள்?; என்று உருகினன்- என்று கூறி
மனம் உருகினான்.

     சுற்றம் சூழ இருப்பது உலகினர்க்குப் பெருமகிழ்வூட்டும். எனவே
தமரெலாம் வர உவந்தனையஎன்றார். எமரின்யார் தவம் முயன்றவர்கள்
என்பதற்கு இவ்வரும்பேறு பெற்ற எம்போல் நல்வினைசெய்தார் யார்
என்றுமாம். அமரர் - சாவில்லாதவர். தாம்தேடி அடைய வேண்டியவன்
தன்னை நாடிவந்ததால் உவப்பு மிகுந்தது.                           3