2527. | பன்னகாதிபர் பணா மணி பறித்து, அவைபகுத்- தென்ன, வானவர் விமானம் இடையிட்டு அரவிடைத் துன்னு கோளினொடு தாரகை தொடுத்த துழனிச் சன்னவீரம் இடை மின்னு தட மார்பினொடுமே |
பன்னகாதிபர் - பாம்பின் தலைவர்களாம் வாசுகி முதலிய பாம்புகளின்; பணாமணி பறித்து - படங்களிலுள்ளநாகரத்தினங்களைப் பிடுங்கிவந்து; அவை பகுத்து என்ன - அவற்றைப் பிரித்துப்பதித்தாற் போல; அரவிடை - மலைப்பாம்புகளின் உடலிலே; வானவர் விமானம் இடையிட்டு - தேவர்களின் விமானங்களை இடையிடையே தொங்கவிட்டு; துன்னு கோளினொடு -விளங்கும் ஒன்பது கிரகங்களுடனே; தாரகை - விண்மீன்களை; தொடுத்த - கட்டிய; துழனி - ஒலியுடன் கூடிய; சன்னவீரம் - ஒருவகை வெற்றிமாலை; இடைமின்னு - இடையே விளங்கும்; தட மார்பினொடும் - பரந்த மார்புடன்; ஏ - ஈற்றசை. பன்னகம் - பாம்பு, பன்னகாதிபர் - வாசுகி, ஆனந்தன், தட்சன், சங்கபாலன், குளிகன்,பதுமன், மகாபதுமன், கார்க்கோடகன் எனும் எட்டுக்குலநாகங்கள் பணம் - படம், துழனி,ஒன்றோடொன்று மோதி எழும் ஒலி. விராதன் அணிந்த வெற்றிமாலையில் தேவர்களின் விமானம்,கிரகங்கள், விண்மீன்கள் ஆகியவை கோக்கப் பெற்றிருந்தன. 11 |