2531. | செங் கண் அங்க அரவின் பொரு இல் செம் மணி விராய் வெங் கண் அங்க வலயங்களும், இலங்க விரவிச் சங்கு அணங்கிய சலஞ்சலம் அலம்பு தவளக் கங்கணங்களும், இலங்கிய கரம் பிறழவே |
செங்கண் அங்க அரவின்- சிவந்த கண்களையும் (நீண்ட) உடலையும் உடைய பாம்புகளுடைய; பொரு இல் - ஒப்பில்லாத;செம்மணி விராய் - சிவந்த மாணிக்கங்கள் கலந்து அமைக்கப்பட்டு; வெங்கண் அங்க வலயங்களும் - கொடிய தன்மை உடைய உறுப்புகளில் அணியும் தோள் வளைகளும்; இலங்க - விளங்கி அசைய; விரவி - பொருந்தி; சங்கு அணங்கிய சலஞ்சலம் - சங்குகள் வருந்திப் பெற்ற சலஞ்சலம் என்னும் உயர்ந்த சங்குகளால்; அலம்பு - ஒலிக்கின்ற, தவளக் கங்கணங்களும் - வெண்ணிறக் கைவளைகளும்; இலங்கிய கரம்பிறழவே - விளங்கும் கைகளில் விளங்கவும்; ஏ - ஈற்றசை. பாம்பின் மணிகளால் இயன்ற வலயங்களோடு முத்துக்கங்கணமும் விராதன் அணிந்துள்ளான்.சஞ்சலம் - வலம்புரி ஆயிரம் சூழ்ந்த ஓர் உயர்ந்த சங்கு. (49). 15 |