2532. | முந்து வெள்ளிமலை பொன்னின் மலையோடு முரண, பந்து முந்து கழல் பாடுபட ஊடு படர்வோன், வந்து மண்ணினிடை யோன் எனினும், வானினிடையோர் சிந்தையுள்ளும் விழியுள்ளும் உளன் என்ற திறலோன் |
முந்து வெள்ளிமலை பொன்னின் மலையோடு முரண - சிறந்த கைலை மலையும், மேருமலையோடு மாறுபடும்படி; பந்து முந்து கழல் பாடுபட - பந்தாகமுன்னே தள்ளும் கால்களால் அவதியுற; ஊடு படர்வோன் - அம்மலைகளின் இடையே நடந்துசெல்வான்; வந்து மண்ணினிடை யோன் எனினும் - வந்து உலகின் இடையே உள்ளான் என்றாலும்; வானினிடையோர் சிந்தையுள்ளும் விழியுள்ளும் உளன் என்ற திறலோன் - தேவர்களின் மனத்திலும் கண்ணிலும் உள்ளவன் என்று கூறப்படும் வலிமையுடையவனும், கைலை மலையையும் மேருமலையையும் பந்துபோல் ஆடவல்ல வலிய பெரிய தாள்களால் அக் காட்டில் செல்பவன் விராதன் ஆவான். அவனிடத்துக்கொண்ட அச்சத்தால் தேவர் சிந்தையுளும் விழியிலும் உளன் என்றார். சிவனுறையும் மலை கைலைஎன்பதால் முந்து வெள்ளிமலை என்றார். வான் - சுவர்க்கத்திற்கு இலக்கணை. 16 |