விராதன், சீதையைக் கவர்ந்து செல்லுதல் 2535. | நில்லும், நில்லும் என வந்து, நிணம் உண்ட நெடு வெண் பல்லும், வல் எயிறும், மின்னு பகு வாய் முழை திறந்து, அல்லி புல்லும்அலர் அன்னம் அனையாளை, ஒரு கை, சொல்லும் எல்லையில், முகந்து உயர் விசும்பு தொடர |
நிணம் உண்ட நெடுவெண் பல்லும் வல்எயிறும் - தசையைப் புசித்த நீண்ட வெண்ணிறப் பற்களும் வலிய கோரப்பற்களும்; மின்னு பகுவாய் முழைதிறந்து - விளங்கும் பிளந்த வாயாகிய குகையைத் திறந்து; ‘நில்லும் நில்லும்’ எனச்சொல்லும் எல்லையில் - ‘நில்லுங்கள், நில்லுங்கள்’ என்று சொன்ன அளவில்; அல்லிபுல்லும் அலர் அன்னம் அனையாளை - அகவிதழ்கள் நெருங்கிய தாமரை மலரில் வீற்றிருக்கும் அன்னப் பறவை போன்ற சீதையை; வந்து ஒருகை முகந்து உயர்விசும்பு தொடர - எதிர் வந்துஒருகையால் எடுத்து உயர்ந்த வானத்தில் தொடர்ந்து செல்ல; எயிறு - பல்லின் விளிம்பும் ஆம். நில்லும் நில்லும் - அடுக்கு. அன்னம் -ஆகுபெயர். 19 |