2537.‘ஆதி நான்முகன் வரத்தின் எனது
     ஆவி அகலேன்;
ஏதி யாவதும் இன்றி, உலகு
     யாவும் இகலின்,
சாதியாதனவும் இல்லை; உயிர்
     தந்தனென்; அடா!
போதிர், மாது இவளை உந்தி, இனிது’
     என்று புகல

    ஆதிநான் முகன் வரத்தின் - படைப்பில் முதலில் தோன்றிய பிரமன்
எனக்குக் கொடுத்த வரத்தினால்; எனது ஆவி அகலேன் -என் உயிர்
நீங்க மாட்டேன்; ஏதியாவதும் இன்றி - ஆயுதங்கள் ஒன்றும்
இல்லாமலேயே; உலகு யாவும் இகலின் சாதியாதனவும் இல்லை - எல்லா
உலகத்தவரும்எதிர்த்துப் போரிட்டாலும் நான் வெல்லக் கூடாதன இல்லை;
அடா! உயிர் தந்தனென் - அற்பர்களே! உங்களுக்கு இரங்கி உயிர்ப்பிச்சை
கொடுத்தேன்; மாது இவளை உந்தி இனிதுபோதிர் - இப்பெண்ணை
என்னிடம் விட்டு இனிதே செல்லுங்கள்; என்று புகல - என்றுவிராதன்
சொல்ல,

     தேவர்களில் முதலில் வைத்துஎண்ணப்படுபவன் நான்முகன் எனலும்
ஆம். ஏதி - காரணம் எனலுமாம். இனி விராதன் இறப்பதைமுன்னமே
தெரிவிக்கும் அமங்கலப் பொருள் படக் கூறும் நெறி: அடா - இவ்வாறு
நான் செய்வனதகாதனவே. உயிர்தந்தனென் - என் உயிரைக் கொடுத்து
விடுகிறேன், மாதிவளை உந்தி இனிதுபோதிர் - இப்பெண்ணை அழைத்துக்
கொண்டு இனிதே செல்வீர், என்பதாம். போதிர் - முன்னிலைஏவல் பன்மை
வினைமுற்று.                                                  21