2539.இலை கொள் வேல் அடல் இராமன்,
     எழுமேக உருவன்,
சிலை கொள் நாண் நெடிய கோதை
     ஒலி ஏறு, திரை நீர்,
மலைகள், நீடு தலம், நாகர் பிலம்,
     வானம் முதல் ஆம்
உலகம் ஏழும், உரும்ஏறு என
     ஒலித்து உரறவே

    எழுமேக உருவன் இலை கொள் வேல் அடல் இராமன் - மேல்
எழுகின்ற நீருண்டது போன்ற மேகத்தின் நீல நிறமுடையவனாகிய அரசிலை
போன்ற நுனியுடையவேலேந்திய வலிய இராமன்; சிலை கொள் நாண்
நெடிய கோதை ஒலிஏறு -
வில்லிற் கொண்டநீண்ட கயிற்றின் மிக்க
ஒலியானது; திரைநீர் மலைகள் நீடுதலம் நாகர் பிலம் வானம்முதலாம்
உலகம் ஏழும் -
அலைகள் கூடிய கடலின் நீரும் மலைகளும் சூழ்ந்த
நீண்ட நிலவுலகமும்நாகர் வாழும் பாதலமும் சுவர்க்க லோகமும் முதலாகிய
ஏழு உலகங்களும்; உரும் ஏறு என ஒலித்துஉரற - பேரிடி ஏறு போலப்
பெருமுழக்கம் உண்டாக்க; ஏ - ஈற்றசை.

     இராமன் எறிந்த வில்லின் நாணொலி ஏழு உலகங்களிலும் இடி ஏறு
போல ஒலித்தது. வேல்படைகொண்டு போவதும் தமிழ் மரபு பற்றிக் கூறி
ஏனைப் படைகளையும் பெறவைத்தார். மேல் உலகம்ஏழாவன: பூலோகம்,
புவலோகம், சுவலோகம், மகாலோகம், சனலோகம், தபோலோகம்,
சத்தியலோகம். கீழேழு உலகம்: அதலம், விதலம், சுதலம், தராதலம்,
இரசாதலம், மகாதலம்,பாதாளம். உரற - எதிரொலிக்க.                23