2542.திசையும், வானவரும், நின்ற திசை
     மாவும், உலகும்
அசையும் ஆலம் என, அன்ன அயில்
     மின்னி வரலும்,
வசை இல் மேரு முதல் மால் வரைகள்
     ஏழின் வலி சால்
விசைய வார் சிலை இராமன் ஒரு
     வாளி விடவே

    அன்ன அயில் - அந்தச் சூலப்படை; திசையும் - எண் திசைகளும்;
வானவரும் - அவ்வெட்டுத்திசைக்காவல் செய் தேவரும்; திசைநின்ற
மாவும் -
அத்திக்குகளில் நின்ற எட்டுயானைகளும்; உலகும் -
உலகங்களும்; அசையும் - கலங்கக் காரணமான; ஆலம் என- ஒரு
நஞ்சென; மின்னிவரலும் - ஒளிவீசி வரவும்; இராமன், வசையில் மேரு
முதல்மால் வரைகள் ஏழின் வலி சால் -
குற்றமில்லாத மேரு முதலாக
உள்ள மலைகள் ஏழை விட வலிமைமிக்க; விசைய வார்சிலை - வெற்றித்
தரும் நீண்ட வில்லிலிருந்து; ஒருவாளி விட -ஓரம்பைத் தொடுத்து எய்ய:
ஏ - ஈற்றசை.

     திசையும் வானவரும் என்பதற்குத் திகைக்கும் தேவரும் எனவும்
பொருள்படும். எ.டு. ‘நீதிசைத்தது உண்டோ’ (1512) திசைவானவர் -
இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு,குபேரன், ஈசானன் என
எண்மர். எட்டுத்திக்கு யானைகள் ஐராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம்,
அஞ்சனம், புட்பதந்தம், சாருவபௌமம், சுப்பிரதீபம் என்பன. மா -
விலங்கின் பொதுப் பெயர்.ஏழுமலைகளாவன: கயிலை, இமயம், மந்தரம்,
விந்தம், நிடதம், எமகூடம், நீலகிரி என்பன.விசயம் என்பது விசையம் என
எதுகை நோக்கித் திரிந்தது எனலாம். விசைய என்பதற்கு வேகமாகஎனவும்
பொருள் கூறுவர். ஒரு - ஒப்பற்ற எனவுமாம்.                       26