2549. | எரியின் வார் கணை இராமன் விட, எங்கும் நிலையாது உருவி ஓட மறம் ஓடுதல் செயா உணர்வினான், அருவி பாயும் வரைபோல் குருதி ஆறு பெருகிச் சொரிய, வேக வலி கெட்டு, உணர்வு சோர்வுறுதலும் |
இராமன் எரியின் வார்கணை விட - இராமபிரான் நெருப்புப் போன்ற நீண்ட அம்புகளை எய்ய; எங்கும் நிலையாது உருவி ஓட - எவ்விடத்தும் தடைப்படாமல் அரக்கன் உடலில் அவ்வம்புகள் ஊடுருவிச் செல்ல; மறம் ஓடுதல்செயா உணர்வினான் - கொடுமை நீங்கா அறிவுடைய அவ்வரக்கன்; அருவி பாயும் வரை போல்- அருவிகள் பாய்ந்து ஓடும் மலை போல; குருதி ஆறு பெருகிச் சொரிய - இரத்த ஆறுபோலத் தன் உடம்பிலிருந்து பெருக்கெடுத்து வழிய; வேக வலி கெட்டு உணர்வு சோர்வுறுதலும் -மிகுந்த வலிமை அழிந்து அறிவிழந்த அளவில். எரியின் வார்கணை அக்கினி யாத்திரமும் ஆகும். எரிக்க வேண்டிய அவ்வம்பு விராதனின் வரவலிமையால் அவனை எரிக்காமல் ஊடுருவியது என்பர். விராதனுக்கு மலையும் அவன் உடலிலிருந்துபெருகும் இரத்தத்திற்கு அருவியும் முறையே உவமையாம். குருதி ஆறு - உருவகம். 33 |