இராமலக்குவர் விராதன் தோள்மேல் ஏறி வெட்டி வீழ்த்தல் 2550. | மெய் வரத்தினன், ‘மிடல்- படை விடப் படுகிலன்; செய்யும் மற்றும் இகல்’ என்று சின வாள் உருவி, ‘வன் கை துணித்தும்’ என, முந்து கடுகி, படர் புயத்து, எய்வு இல் மல் பொருவு தோள் இருவர் ஏற, நிருதன் |
எய்வு இல் மல் பொருவு தோள் இருவர் - சோர்வில்லாத, மற்போர் செய்வதில் வல்ல தோள்களை உடைய இராமலக்குவர்; மெய்வரத்தினன் - அழியாவரம் பெற்ற விராதன்; மிடல் படை விடப் படுகிலன் - வலிய அம்புகளை எய்தும் இறவான்; மற்றும் இகல் செய்யும் - மேலும் இவன் போர்புரிவான்; என்று சினவாள் உருவி - எனக்கருதிக் கோபத்தோடு வாள்களை உருவி; வன்கை துணித்தும் என - (அரக்கனின்) வலிய கைகளை வெட்டி வீழ்த்துவோம் என்று; முந்து கடுகி படர் புயத்து ஏற - அவன் முன் விரைந்துசென்று அவனுடைய பரந்த தோள்களின் மீது ஏற; நிருதன் - அரக்கனாம் அவ் விராதன். வரம் பெற்ற விராதன் இறவாததால் இராமலக்குவர் வாளால் அவன் தோளை வெட்ட அவன் மீதுஏறினர். இருவர் கோபத்தை வாளின் மீது ஏற்றிக் கூறப்பட்டது என்பர். சினம் - போர் எனவும்கூறுவர். எய்வில் என்பதற்கு அம்புகளை எய்யும் வில்லுடைய என்றுமாம். 34 |