2556.அழுது வாய் குழறி ஆர் உயிர்
     அழுங்கி அலையா
எழுது பாவை அனையாள் நிலை
     உணர்ந்து இளையவன்
தொழுது ‘தேவி துயர் கூர
     விளையாடல் தொழிலோ?
பழுது வாழி’ என ஊழி
     முதல்வன் பகர்வுறும்:

    வாய் குழறி அழுது - வாய்ச் சொற்கள் குழறி அழுது, ஆர்உயிர்
அழுங்கி -
அரிய உயிர் வருந்தி; அலையா -அலைந்து, எழுது பாவை
அனையாள் நிலை உணர்ந்து -
ஓவியத்தில் எழுதும் பதுமை போன்ற
சீதையின் துன்பநிலையை அறிந்து; இளையவன் - இலக்குவன்; தொழுது -
இராமனைவணங்கி; வாழி - நீர் வாழ்க; தேவி துயர்கூர - சீதை இவ்வாறு
பெருந்துயரில்வருந்த; விளையாடல் தொழிலோ - விளையாட்டாக எண்ணி
இருப்பது நன்றோ? பழுது - இது குற்றம்; என - என்று கூற; ஊழி
முதல்வன் பகர்வுறும் -
பல உலகத்தைத்தோற்றுவித்தவனாகிய இராமன்
கூறத் தொடங்குவான்.

     சீதையின் அவல நிலை கண்டு இலக்குவன் இராமனிடம் ‘இவ்வாறு
விளையாடலாமா?’ எனக்கூறினான். எழுது பாவை - அசையாது இருத்தலுக்கு
உவமை. எனவே சீதை மூர்ச்சித்து விழுந்தாள்என்பர். பெரியோரிடம்
பேசுமுன் கூறும் மரியாதை மொழி ‘வாழி’ என்பதாம். இனிப்பழுது எனக்
கூறியமையைப் பொறுத்துக் கொள்ளுமாறு ‘வாழி’ என்று கூறினான்
எனலுமாம். ஊழி முதல்வன் என்பதால்இராமனின் முதன்மை நிலை
புலப்படும்.                                                    40