விராதனைப் புதைக்க அவன் சாபம் நீங்கி விண்ணில் தோன்றல்

2558.தோள் இரண்டும் வடி வாள்கொடு
     துணித்து, விசையால்
மீளி மொய்ம்பினர் குதித்தலும்,
     வெகுண்டு, புருவத்
தேள் இரண்டும் நெரிய, சினவு
     செங் கண் அரவக்
கோள் இரண்டு சுடரும்
     தொடர்வதின் குறுகலும்

    மீளி மொய்ம்பினர் - வலிய தோளுடைய இராமலக்குவர்; விசையால்
வெகுண்டு வடிவாள் கொடு தோள் இரண்டும் துணித்து -
வேகத்தோடு
சினந்து தம் வடித்த கூரிய வாளைக் கொண்டு அரக்கனின் இரு
தோள்களையும்வெட்டி; குதித்தலும் - கீழே தாவிக் குதித்தலும்; புருவத்
தேள் இரண்டும் நெரிய -
(விராதனின்) புருவமாகிய தேள் இரண்டும்
நெரியும்படி சினந்து; சினவு செங்கண்அரவக்கோள் - கோபத்தால் சிவந்த
கண்களை உடைய இராகு எனும் கிரகம்; இரண்டு சுடரும்தொடர்வதின்
குறுகலும் -
சந்திரன் சூரியன் எனும் இரண்டு சுடர்களையும் பற்றத்
தொடர்வதுபோல நெருங்கி வரலும்,

     மீளி மொய்ம்பினர் - கூற்றுவன் போலவலிமையுடையவர் எனலுமாம்.
கொடுக்கும், அடர்ந்த பலகாலும் கொண்ட தேளைப் புருவமாக உருவகம்
செய்யப் பெற்றுள்ளது, விராதன் இராகு போல இராமலக்குவர் எனும் இரு
சுடர்களைப் பற்ற வரும்உவமை புராண மரபில் புனையப்பட்டுள்ளது. இது
இல்பொருளுவமை.                                             42