2560.மத நல் யானை அனையான் நிலம்
     வகிர்ந்த குழிவாய்
நதம் உலாவு நளி நீர்வயின்
     அழுந்த, நவை தீர்
அதவம் ஆய் நறு நெய் உண்டு உலகில்
     அன்பர் கருதிற்று
உதவு சேவடியினால், அமலன்
     உந்துதலுமே

    நவை தீர் அதவம் ஆய் நறுநெய் உண்டு - குற்றமற்ற
அத்திக்கட்டையால் செய்த அகப்பை கொண்டு பெய்த நறு மண நெய்யை
உண்டு; உலகில்அன்பர் கருதிற்று உதவு சேவடியினால் - உலகத்தில்
அடியவர் நினைத்தவற்றை அருளும் சிவந்ததன் திருப்பாதத்தால்;
அமலன் - தூயவனான இராமன்; உந்துதலும் - உதைத்துத்தள்ளவும்;
நல்மத யானை அனையான் - சிறந்த மதம் கொண்ட யானை போன்ற
இலக்குவன்; நளிநீர் உலாவு நதம்வயின் - மிகுந்த நீர் பாயும் மேற்கு
நோக்கி ஓடும் ஆற்றின்அருகில்; நிலம் வகிர்ந்த குழிவாய் - மண்ணில்
தோண்டிய குழியில்; அழுந்த - பதிய; ஏ - ஈற்றசை.

     மதநல்யானை அனையான் என்ற தொடர் விராதனைக் குறிக்கிறது
என்பர் சிலர். யாகத்தீ தூயதுஎன்பதை இங்கு உணரத்தக்கது. ஆழமாகக்
குழி தோண்டியதால் ஊறிய நீர்க்கு யாகத்தில் பெய்யும்நெய்யாகக்
கொள்ளலாம். அதவு - அதவம், அத்தி (செய்த அகப்பை) அ+மலன் -
குற்றமற்றவன். ‘அதவத்தனன் என்பது சங்கம்.                       44