2561.பட்ட தன்மையும் உணர்ந்து
     படர் சாபம் இட முன்
கட்ட வன் பிறவி தந்த கடை
     ஆன உடல்தான்
விட்டு விண்ணிடை விளங்கினன்-
     விரிஞ்சன் என ஓர்
முட்டை தந்ததனில் வந்த முதல்
     முன்னவனினே

    பட்ட தன்மையும் உணர்ந்து - அங்ஙனம் தான் மண்ணில் புதைக்கப்
பட்ட தன்மையை அறிந்து; முன்படர் சாபம் இட - முன்(குபேரனால்)
பற்றிய சாபம் இட்டதால்; கட்ட வன் பிறவி தந்த - கொடிய அரக்கப்
பிறவி கொடுத்த; கடைஆன உடல்தான் விட்டு - கீழான இழிந்த உடம்பை
நீக்கி; ஓர்முட்டை தந்து - இரண்யகருப்பம் எனும் முட்டையை உண்டாக்கி;
அதனில் வந்த விரிஞ்சன்என முன்னவனின் - அதிலிருந்து தோன்றிய
பிரமன் எனும் முதல்வன்போல்; விண்ணிடைவிளங்கினன் - (விராதன்
தன் முன்னைய கந்தருவ உருவில்) வானில் தோன்றினான். ஏ -ஈற்றசை.

     அண்டத்தில் பிரமன் தோன்றியது போல வானில் விராதன்
தோன்றினான். சாபம்பெற்றதைக் ‘கரக்க வந்த’ (2580) என்ற இப்படலப்
பாடல் பின்னர்க் கூறும். விரிஞ்சன் -அன்னப்பறவையால் தாங்கப்
பெறுபவனாம் பிரமன். பட்ட தன்மை உணர்தல் என்பது முன் பிறவிஞானம்
பெறல். பிறவித் துன்பம் தன்னைப் பற்றியும், பிற உயிர் பற்றியும்
தெய்வத்தைப்பற்றியும் வருவன.                                 45