விராதன் இராமனைத் துதித்தல் 2563. | வேதங்கள் அறைகின்ற உலகு எங்கும் விரிந்தன உன் பாதங்கள் இவை என்னின், படிவங்கள் எப்படியோ? ஓதம் கொள் கடல் அன்றி, ஒன்றினோடு ஒன்று ஒவ்வாப் பூதங்கள்தொறும் உறைந்தால், அவை உன்னைப் பொறுக்குமோ? |
வேதங்கள் அறைகின்ற உலகு எங்கும் விரிந்தன உன் பாதங்கள்- வேதங்கள் சொல்கின்ற எல்லா உலகங்களிலும் பரந்துள்ளன உன்னுடைய திருவடிகள்; இவை என்னின்படிவங்கள் எப்படியோ - இவைதாம் என்றால் உன் திருவடியின் மற்ற உறுப்புக்கள் எவ்வாறு அமைந்துள்ளனவோ?; ஓதம் கொள் கடல் அன்றி - நீர் கொண்ட கடல் அல்லாமல்; ஒன்றினொடு ஒன்று ஒவ்வாப் பூதங்கள் தொறும் உறைந்தால் - ஒன்றுக் கொன்று முரணாக உள்ளமற்ற பூதங்களில் நீ தங்கியிருந்தால்; அவை உன்னைப் பொறுக்குமோ - அப்பூதங்கள் உன்னைத் தாங்கும் வலிமையுடையன ஆகுமோ? (ஆகா). ‘வேதங்கள் ஒலிக்கின்ற’ ‘வேதங்கள் துதிக்கின்ற’ எனவும் கூறுவர். திருவடி உலகெங்கும்பரந்தது திரிவிக்கிரமனாக வாமனாவதாரத்தில் கண்டதாம். ஓதம் - குளிர், ஒலி எனவுமாம்ஐம்பூதங்களாவன, நிலம், நீர், காற்று, தீ, ஆகாயம், பூதங்கள், வன்மை மென்மை, தட்பம்வெட்பம், உரு அரு எனப் பல்வேறு முரண்பாடு கொண்டவை. ‘படிவங்க’ளில் கள் என்பதை அசையாக்கிவடிவம் எனவும் கூறுவர். எப்படியோ - ஐயப்பொருளில் வந்த ஓகாரம். பொறுக்குமோ - எதிர் மறைப்பொருளில் வந்த ஓகாரம். விராதன் துதிபோல் இந்நூலில் இந்திரன், கவந்தன் பிரமன் துதிகளும்ஒப்பு நோக்கற்குரியன. 47 |