2565. | புறம் காண அகம் காணப் பொது முகத்தின் அருள் நோக்கம் இறங்காத தாமரைக் கண் எம்பெருமாஅன்! இயம்புதியால்; அறம் காத்தற்கு, உனக்கு ஒருவர் ஆரும் ஒரு துணை இன்றி, கறங்கு ஆகும் எனத் திரிய, நீயேயோ கடவாய்தான்? |
பொது முகத்தின் அருள்நோக்கம் இறங்காத தாமரைக்கண் எம்பெருமாஅன் - நடுநிலையில் நின்று அருட்பார்வை நீங்காத செந்தாமரை போன்ற கண்ணுடைய எங்கள் பெருமானே!; புறம் காண அகம் காண - ஒவ்வொரு பொருளின் உள்ளும் புறமும் கண்டு (வியாபித்து); அறம் காத்தற்கு - தருமத்தைப் பாதுகாத்தற்கு; உனக்கு ஒருவர் ஆரும் ஒருதுணை இன்றி - உனக்கு வேறு ஒருவர் எவரும் ஒரு சிறு துணையும் செய்யாமல், கறங்கு ஆகும் எனத் திரிய - காற்றாடி போலச் சுற்றித் திரிவதற்கு; நீயேயோ கடவாய்தான் - நீ தானோகடமைப்பட்டாய், இயம்புதி - எனக்குக் கூறுவாய். ஆல் - அசை. பரம்பொருள் எல்லாப் பொருள்களிலும் பரவிநின்று அறங்காத்து அருள்புரிவதை இப்பாடல்விளக்கும். இறங்காத - முன் பின் தாழாத. அறங்காக்கக் காற்றாடி போல் திரிந்த நிலையை முன்யானை காத்த நிகழ்ச்சியில் காணலாம். துணையின்றி அறங்காப்பதால் ‘தருமத்தின் தனி மூர்த்தி’ ஆவான் (2568). புறமாகிய ஊனக் கண்ணாலும் அகமாகிய ஞானக் கண்ணாலும் காண - எனவும்உரைப்பர். எம்பெருமாஅன் - அண்மைவிளி அளபெடுத்துவந்தது. 49 |