2573. | அரவு ஆகிச் சுமத்தியால், அயில் எயிற்றின் ஏந்துதியால், ஒரு வாயில் விழுங்குதியால், ஓர் அடியால் ஒளித்தியால்- திரு ஆன நிலமகளை; இஃது அறிந்தால் சீறாளோ மரு ஆரும் துழாய் அலங்கல் மணி மார்பில் வைகுவாள்? |
திரு ஆன நிலமகளை - அழகிய பூ தேவியை; அரவு ஆகிச் சுமத்தியால் - ஆதிசேடன் எனும் பாம்பாகித் தாங்கிநிற்கிறாய்; அயில் எயிற்றின் ஏந்துதியால் - (வராக அவதாரத்தில்) கூரிய உன்பல்லில் தாங்கியுள்ளாய்; ஒரு வாயில் விழுங்குதியால் - (ஊழிக்காலத்தில் அப்பூமியை)ஒரே வாயில் முழுதும் விழுங்குகின்றாய்; ஓர் அடியால் ஒளித்தியால் - திரிவிக்கிரமனாகி ஒரு திருவடிக்குள் மறைத்துள்ளாய்; மரு ஆரும் துழாய் அலங்கல் மணிமார்பில் வைகுவாள் - மணம் நிறைந்த திருத்துழாய் மாலை உடைய நின் அழகிய மார்பில்தங்கியுள்ள திருமகள்; இஃது அறிந்தால் சீறாளோ? - இச் செய்திகளை அறிந்தால்உன்மேல் ஊடல் (பெருங் கோபம்) கொள்ளமாட்டாளா? (கொள்வள்) திருமால் அரவானது புராணமரபு. 'நாகர்களிடை நான் அனந்தன்' என்பது பகவத் கீதை (10 .29). மணிமார்பு - நீலமணி போல் ஒளிவீசும் மார்பு எனலுமாம். தலைவன் பிற பெண்பால் சேரின்தலைவி சீறுவது அகப்பொருளில் விரித்துரைக்கப் பெறும். சுமத்தியால், ஏந்துதியால், விழுங்குதியால், ஒளித்தியால் என நான்கு 'ஆல்'களும் அசைகள். 57 |