2576. | ஒப்பு இறையும் பெறல் அரிய ஒருவா! முன் உவந்து உறையும் அப்பு உறையுள் துறந்து, அடியேன் அருந்தவத்தால் அணுகுதலால், இப் பிறவிக் கடல் கடந்தேன்; இனிப் பிறவேன்; இரு வினையும், துப்பு உறழும் நீர்த்த சுடர்த் திருவடியால், துடைத்தாய் நீ |
ஒப்பு இறையும் பெறல் அரிய ஒருவா! - சிறிதும் ஒப்பு வேறு பெற முடியாத பொருளே!;முன்உவந்து உறையும் - முன்னே மனம் விரும்பிப் பள்ளி கொண்ட; அப்பு உறையுள் துறந்து- திருப்பாற்கடலாம் இருப்பிடத்தை விட்டு நீங்கி; அடியேன் அருந்தவத்தால் - அடியவன் முன் செய்த அரிய தவப்பேற்றால்; அணுகுதலால் இப்பிறவிக் கடல் கடந்தேன் - நீ எனக்குக் காட்சியளிக்க வந்ததால் என் இழிபிறப்பாம் கடலை விட்டுப் பிழைத்தேன்; இனிப்; பிறவேன் - இனி மறுபடியும் பிறக்க மாட்டேன்; இருவினையும் - என் நல்வினை தீவினைகள் எல்லாம்; துப்புறழும் நீர்த்த - பவளம் போன்ற செந்நிறம் கொண்ட;சுடர்த் திருவடியால் - நெருப்பு போன்ற உன் திருவடியால்; நீ துடைத்தாய் - நீ போக்கி அருளினாய். இராமன் தன் திருவடிகளால் உதைத்துப் பள்ளத்தில் தள்ளிய பொழுது 'திருவடியால்துடைத்தாய்' எனப் போற்றுகிறான் விராதன். அப்பு - நீர், நீராலாகிய கடல், ஆகுபெயர். 60 |