2582.அன்று மூலம் ஆதியாய்!
இன்றுகாறும் ஏழையேன்
நன்று தீது நாடலேன்;
தின்று தீய தேடினேன்.

    ஆதியாய்! - முதற் பொருளே!; அன்று மூலம் இன்று காறும் -
அன்று முதல் இன்று வரை; ஏழையேன் நன்றுதீது நாடலேன் -
அறிவில்லாத நான் நல்லது கெட்டதை ஆராயவில்லை; தின்று தீய
தேடினேன்-
உயிர்களைக் கொன்று உண்டு தீவினையைத் தேடிக்
கொண்டேன்.

     காம நோயால் அறிவிழந்து, உயிர்க் கொலை புரிந்து தீயவற்றைத்
தேடிக்கொண்டான்.                                           66