சரபங்கனுடைய குடில் அடைதல் கலி விருத்தம் 2587. | குரவம், குவி கோங்கு, அலர் கொம்பினொடும் இரவு, அங்கண், உகும் பொழுது எய்தினரால்- சரவங்கன் இருந்து தவம் கருதும் மரவம் கிளர், கோங்கு ஒளிர், வாச வனம் |
குரவம் குவிகோங்கு அலர் - குரா மலரும் குவிந்த கோங்கு அரும்புகளும் மலர்ந்த - கொம்பினொடும் - பூங் கொம்புபோன்ற சீதையுடன்; சரவங்கன் இருந்து தவம் கருதும் - சரபங்க முனிவன் தங்கியிருந்துதவத்தைச் செய்கின்ற; மரவம் கிளர் கோங்கு ஒளிர் வாச வனம்- மராமரத்திலிருந்துவளர்ந்தோங்கும் தேன் விளங்கு மணங்கொண்ட வனத்தை; இரவு அங்கண் உகும் பொழுது எய்தினர் - இரவு நேரம் அவ்விடத்தே சேரும்பொழுதில் அடைந்தனர், ஆல் - அசை. குரவமலரணிந்த, குவிந்த கோங்கு போன்ற முலைகளை உடைய சீதை எனலுமாம். மரவம் என்பதுவெண்கடம்பு எனவும் குங்குமமரம் எனவும் கொள்வர். சரவங்கன் - சரபங்கன் எதுகை நோக்கித்திரிந்தது. இரவு அங்கு அணுகும் பொழுது எனவும் பிரிப்பர். குரவம் கோங்கு என்பன முதலாகு பெயர்கள். கொம்பு - உவமவாகுபெயர். இது முதல் கலிவிருத்தம். மூச்சீரடி வஞ்சி விருத்தமாகவும்கொள்வர். 1 |