2590. | வானில் பொலி தோகையர் கண்மலர் வண் கானில் படர் கண்-களி வண்டொடு, தார் மேனித் திரு நாரதன் வீணை இசைத் தேனில் படியும் செவி வண்டு உடையான் |
வானில் பொலி தோகையர் - தேவர் உலகில் விளங்கும் மயில் போன்ற தேவ மகளிரின்; கண்மலர் வண்கானில் - கண்களாம் வளப்பமுடைய பூக்கள் பூத்த காட்டில்; படர் கண்களி வண்டொடு - படர்ந்துசெல்லும் தன் கண்களாம் மயக்கமுற்ற வண்டுகளோடு; தார் மேனித் திரு நாரதன் - மாலைஅணிந்த திருமேனியும் திருவினையுமுடைய நாரதமுனிவன்; வீணை இசைத் தேனில் - மகதி எனும்வீணையில் எழும் இசையாகிய தேனிடத்து; படியும் செவி வண்டு உடையான் - தோயும் செவிகளாம் வண்டுகளை உடையவனாம் இந்திரன். வண்டுகள் மலர் வனத்தில் மொய்ப்பது போல் தெய்வ மகளிரைத் தன் ஆயிரம் கண்களால்கண்டுகளித்தும், வண்டு தேன் பருகி இன்புறல் போல் நாரத வீணை இசையினைக் கேட்டு மகிழ்ந்தும்இருந்தனன் இந்திரன் - இது உருவக அணி. கண்வண்டோடு செவி வண்டும் உடையவனாம். நாரதர் எனின் ஆன்ம ஞானம் அளிப்பவன், நரர்களுக்குள்ள ஒற்றுமையைப் பிளப்பவன், அன்பை அருள்பவன் என்றும்பொருள். 4 |