2592.செம் மா மலராள்
     நிகர் தேவியொடும்,
மும் மா மத வெண் நிற
     முன் உயர்தாள்
வெம் மா மிசையான்; விரி
     வெள்ளி விளங்கு
அம் மா மலை அண்ணலையே
     அனையான்;

    செம்மா மலராள் நிகர் தேவியொடும் - சிவந்த பெரிய தாமரை
மலரில் வீற்றிருக்கும் திருமகளைப் போன்ற தன் மனைவியாம் சசியுடன்;
மும்மா மத வெண்நிற முன் உயர் தாள் வெம்மா மிசையான் - மூன்று
பெரியமதப்பெருக்குடையதும் வெள்ளை நிறமுடையதும் உயரமான
முன்னங்கால்களை உடையதுமான அச்சமூட்டும்ஐராவதம் எனும் யானை
மேல் வரும் இந்திரன்; விரி வெள்ளி விளங்கு அம்மா மலை
அண்ணலையேஅனையான்-
ஒளி பரந்த வெள்ளி போல் திகழும் அந்தப்
பெரிய கைலை மலைமேல் (உமையுடன்விளங்கும்) சிவனை ஒத்திருப்பவன்.

     மும்மதம் - கன்னமதம், கபோல மதம், பீசமதம் என்பன. இந்திரன்
தன் மனைவியுடன் ஐராவதயானை மேலிருப்பதற்குச் சிவன் உமையுடன்
கயிலை மேல் வீற்றிருப்பது உவமை. யானைக்கு மலையைஉவமிப்பது
கவிமரபு. யானையின் முன்னங்கால்கள் பின்னங்கால்களை விட உயரமானவை.
வெம்மா -மதம் பிடிப்பின் யானையின் உடல் வெப்பமாயிருத்தலைக்
குறிக்கும். கொடுமையும் அழகும்ஆம்.                              6