2602. | 'எந்தாய்! உலகு யாவையும் எவ் உயிரும் தந்தான் உறையும் நெறி தந்தனனால்; நந்தாத பெருந்தவ! நாடு அது நீ வந்தாய் எனின், நின் எதிரே வருவான்; |
எந்தாய்! - எம் தந்தை போன்ற பெரியீர்!; உலகு யாவையும் எவ் உயிரும் தந்தான் உறையும் நெறிதந்தனன் - உலகங்கள் எல்லாவற்றையும் அவற்றில் வாழும் எல்லா உயிரினங்களையும் படைத்தவனாம் பிரமதேவன் வாழும் சத்தியலோகத்தில் வீற்றிருக்கும் பேற்றை உமக்கு அருளினான்,அது நந்தாத பெருந்தவ நாடு - அந்த உலகம் அழியாத பெருந் தவத்தால் அடையத்தக்கதாகும்;நீ வந்தாய் எனின் - நீர் அங்கு வருவீர் என்றால்; நின் எதிரே வருவான் - அப்பிரம தேவன் உம் எதிர் வந்து அழைத்துச் செல்வான்; ஆல் - அசை. நெறி - இடம், நந்தாத பெருந்தவ என்ற தொடரை சரபங்க முனிக்கே விளியாக்கிக் கெடாதபெருந் தவத்தை உடையோய் எனக் கூறலுமாம். எந்தாய் என்பது இடவழுவமைதி, வந்தாய் என்பது காலவழுவமைதி. 16 |