இந்திரன் வந்திருத்தலை இராமன் உய்த்து உணர்தல் 2607. | என்று, இன்ன விளம்பிடும் எல்லையின் வாய், வன் திண் சிலை வீரரும் வந்து அணுகா, ஒன்றும் கிளர் ஓதை யினால் உணர்வார், நின்று, 'என்னைகொல் இன்னது?' எனா நினைவார்: |
என்று இன்ன விளம்பிடும் எல்லையின் வாய் - என்று இப்படிச் சரபங்கர் கூறிய போது; வன் திண் சிலை வீரரும் வந்து அணுகா - வலிமையும் திண்மையும் உடைய வில்லேந்திய வீரர்களாம் இராமலக்குவர் அங்கு வந்தடைந்து; ஒன்றும் கிளர் ஓதையினால் உணர்வார் - அவ்விடத்துப் பொருந்திய, மேலெழும்ஆரவாரத்தினால் காரணத்தை அறிந்தவராய்; நின்று - அவ்விடத்தே நின்று; என்னைகொல் இன்னது எனா நினைவார் - என்னவோ இங்கு நிகழும் செயல் என்று கருதினார். கிளர் ஓசை - இந்திரனுடன் வந்த யானை முதலியவற்றால் எழுந்த ஓசை. வன் திண் - ஒருபொருட் பன்மொழி கொல் - ஐயப் பொருள் தரும் இடைச் சொல் அணுகா. செய்யா எனும் வாய்பாட்டுஉடன்பாட்டு வினையெச்சம். 21 |