இந்திரன் இராமனைக் கண்டு துதித்தல்

2610.கண்தாம் அவை
     ஆயிரமும் கதுவ,
கண் தாமரைபோல் கரு
     ஞாயிறு எனக்
கண்டான், இமையோர்
     இறை-காசினியின்-
கண்தான், அரு நான்
     மறையின் கனியை.

    இமையோர் இறை - தேவர்க்கரசனாம் இந்திரன்; காசினியின்கண் -
பூமியின் மேல்; அருநான் மறையின்கனியை- அரிய நான்கு வேதங்களின்
இனிய பழமாம் இராமனை; கண் தாமரை போல் கருஞாயிறு என -
கண்கள் தாமரை இதழ் போலும் நிறம் கரிய சூரியனே போலும் என்று;
கண்தாம் அவை ஆயிரமும் கதுவ(க்)கண்டான் - தன் ஆயிரம்
கண்களுமே (இராமன் உருவில்)பொருந்தி ஊன்றப் பார்த்தான்; தான் -
அசை.

     இராமன் ஞாயிறு போல் ஒளியும் கரிய நிறமும் கொண்டவனாதலின்
கரு ஞாயிறு எனஉருவகிக்கப்பட்டான். 'கரு ஞாயிறு போல்வர்' என
முன்னரும் கண்டோம் (1163) நான்மறையின்கனி என்ற பொருள் விளங்க
'வேதத்தை வேதத்தின் சுவைப்பயனை' எனப் பெரிய திருமொழியும் கூறும்
(2-3: 2). இப்பாடலில் கருஞாயிறு என இல்பொருள் சுட்டப் பெறுகிறது.   24