கலிவிருத்தம்

2617.'வல்லை வரம்பு இல்லாத
     மாய வினைதன்னால்
  மயங்கினரோடு எய்தி, மதி
     மயங்கி, மேல்நாள்,
"அல்லை இறையவன் நீ ஆதி"
     என, பேதுற்று
  அலமருவேம்; முன்னை அறப்
     பயன் உண்டாக,
"எல்லை வலயங்கள் நின்னுழை"
     என்று, அந் நாள்
  எரியோனைத் தீண்டி, எழுவர்
     என நின்ற
தொல்லை முதல் முனிவர்,
     சூளுற்ற போதே,
  தொகை நின்ற ஐயம்
     துடைத்திலையோ?-எந்தாய்!'

    எந்தாய் - எங்கள் தந்தையே! மேல்நாள் வல்லை வரம்பு இல்லாத
மாய வினை தன்னால் -
முன்காலத்தில் வலிமை வாய்ந்த எல்லை
இல்லாத மாயையின் சூழ்ச்சியால்; மயங்கினரோடு எய்திமதிமயங்கி -
அறிவு மயக்க முற்றவரோடு சேர்ந்து அறிவு திரிந்து; இறைவன் நீ
அல்லை -
பரம்பொருளாகிய கடவுள் நீ அன்று என்றும்; ஆதி என -
நீயே கடவுள் என்றும்; பேதுற்று அலமருவேம் - தடுமாறி வருந்தும்
எங்களுடைய; முன்னை அறப்பயன் உண்டாக - முற்பிறவியில் செய்த
நல்வினையின் பயன் ஏற்பட; அந்நாள் எல்லை வலயங்கள் நின்னுழை
என்று -
அக்காலத்து எல்லையாக உள்ள உலகங்கள் உன்னிடத்துத்
தங்கியுள்ளன என்று; எழுவர் என நின்ற தொல்லை முதல் முனிவர் -
எழுவராய் நிலைபெற்ற பண்டை முனிவர்கள்; எரியோனைத் தீண்டிச்
சூளுற்றபோது -
அக்கினியைத் தீண்டிச் சபதம் செய்த போது; தொகை
நின்ற ஐயம் துடைத்திலையோ-
யார்பரம் பொருள் என அறியாது திரண்டு
நின்றஎங்கள் சந்தேகத்தையும் நீ அழித்தாய் அல்லவோ?; ஏ - அசை.

     மாய வினை - இராசச, தாமசக் குணங்களால் ஏற்படும் தீவினைகள்.
எரியோன் என்பதற்குத்தழல் நிறங்கொண்ட சிவன் என்பர் சிலர். ஏழு
முனிவர்: அத்திரி, பிருகு, குப்சர், வசிட்டர்,கௌதமர், காசிபர், ஆங்கிரசர்
ஆவர். சூளுற்றது; திருமாலே பரம் பொருள் என்றது, இவ்வரலாறுபற்றிய
செய்திகள் புலப்படவில்லை இது பற்றிப் பலவாறு உரைப்பாரும் உளர்.
வலயம் - குவலயம்என்ற சொல்லின் முதல்குறையும் ஆம் என்பர்.      31