இராமன் முதலியோர் சரபங்கன் குடிலில் தங்குதல் 2619. | போனவன் அக நிலை புலமையின் உணர்வான் வானவர் தலைவனை வரவு எதிர் கொண்டான்; ஆனவன் அடி தொழ, அருள் வர, அழுதான் தானுடை இட வகை தழுவினன், நுழைவான். |
போனவன் அகநிலை புலமையின் உணர்வான் - போன இந்திரனின் மனநிலையை ஞானக் கண்ணால் சரபங்கர் அறிபவராகி; வானவர் தலைவனை வரவுஎதிர் கொண்டான்- தேவர்களின் தேவனாம் இராமனை வரவேற்றான்; ஆனவன் - அப்படி வந்த இராமனும்; அடி தொழ - முனிவனின்அடிவணங்க; அருள் வர அழுதான் - அன்பு பெருகக் கண்ணீர் சிந்தினான்; தானுடை இடவகைதழுவினன் நுழை வான் - தானிருக்கும் குடிலிடத்து இராமனைத் தழுவிக் கொண்டு உட்புகுவார். புலமை - அறிவு, ஞானம். அருள் - இலக்கணையாய் அன்பிற்காயிற்று இட வகை - இருப்பிடம்,வீடு தானுடை இடவகை தழுவினன் நுழைவான் என்பதற்குத் தன்னடியார் இருப்பிடமே தன் வைகுந்தம் எனக்கருதும் இராமன் நுழைந்தான் என்பர். அழுகை உவகைக் கலுழ்ச்சி. 33 |