2625. 'யான் வரும் அமைதியின் இது
     செயல் எவனோ?-
மான் வரு தனி உரி
     மார்பினை!' எனலும்,
மீன் வரு கொடியவன் விறல்
     அடும் மறவோன்
ஊன் விடும் உவகையின்
     உரை நனி புரிவான்:

    மான் வரு தனிஉரி மார்பினை - மானிடத்து அடையப் பெற்றதான
ஒப்பற்ற தோலைத் தரித்த மார்பை உடைய முனிவ!; யான் வரும்
அமைதியின் இது செயல் எவனோ எனலும் -
நான் இங்கு வந்த
இப்பொழுது இப்படி உயிர்விடும்செயலை நீர் செய்வது ஏனோ என்று
இராமன் கேட்டதும்; மீன் வரு கொடியவன் விறல் அடும்மறவோன் -
மீன் உரு எழுதிய கொடியை உடைய மன்மதனின் வலிமையை அழித்த
தவவலியுடையசரபங்கர், ஊன் விடும் உவகையின் உரை நனி புரிவான் -
தன் உடலைவிட்டு நீங்கும்மகிழ்ச்சி மிகுந்து பின்வரும் சொற்களை நன்கு
விரும்பிச் சொன்னார்.

     அமைதி - சமயம், தவம்புரி முனிவர் மான்தோல் போர்த்தல் மரபு.
திருமுருகாற்றுப்படையில்'மானின் உரிவை தைஇய ஊன்கெடு மார்பின்'
(முருகு. 128-9) என வருதல் காண்க. மீன்வரு கொடியவன்விறல் அடும்
மறவோன் என்ற தொடர் சரபங்கர் எனப் பெயர் பெற்றதற்குக் காரணமாக
அமைகிறது.விறல் அடும் அறவோன் எனவும் பிரிக்க இடமுண்டு. ஊன்
ஆகுபெயர் எவனோ - ஓகாரம்,அசை.                            39