இராமன் முதலியோர் சரபங்கர் குடிலிலிருந்து போதல் கலிவிருத்தம் 2631. | அனையவன் இறுதியின் அமைவுநோக்கலின், இனியவர், இன்னலின் இரங்கும் நெஞ்சினர், குனி வரு திண் சிலைக் குமரர், கொம்பொடும், புனிதனது உறையுள்நின்று அரிதின் போயினார். |
இனியவர் குனிவரு திண் சிலைக்குமரர் - எல்லோர்க்கும் இனிமையை அளிப்பவர்களும் வளைந்த வலிய வில்லையுடையவர்களுமான இராமலக்குவர்;அனையவன் இறுதியின் அமைவு நோக்கலின் - அந்தச் சரபங்க முனிவரின் முடிவின் நிலையைப்பார்த்தமையால்; இன்னலின் இரங்கும் நெஞ்சினர் - துன்பத்தால் வருந்தியமனமுடையவர்களாய்; கொம்பொடும் - பூங்கொம்பு போன்ற சீதையுடன்; புனிதனது உறையுள் நின்று அரிதின் போயினார் - தூயவராம் அம்முனிவரின் தவச்சாலையிலிருந்து துன்பத்தோடுநடந்து சென்றனர். சரபங்கர் தீயில் புக்கு நல்லுலகம் அடைந்ததைப் பார்த்து இராமன் முதலியோர்வியப்பெய்தினர் என்பர் வால்மீகி. இங்குக் கம்பர் அந்நிலையைத் துன்பச் சூழலாகக்காட்டுகிறார். தீப்புகு காட்சி, யாவர் மனத்தையும் கலங்கச் செய்வதாம். உறையுள் -இருப்பிடம், அரிதிற் போயினார் - அம்முனிவரின் பிரிவால் வருந்திச் சென்றனர் எனலுமாம்.கொம்பு - உவமையாகுபெயர். 1 |