இராமன் முதலியோர் சரபங்கர் குடிலிலிருந்து போதல்

கலிவிருத்தம்

2631. அனையவன் இறுதியின்
     அமைவுநோக்கலின்,
இனியவர், இன்னலின்
     இரங்கும் நெஞ்சினர்,
குனி வரு திண் சிலைக்
     குமரர், கொம்பொடும்,
புனிதனது உறையுள்நின்று
     அரிதின் போயினார்.

    இனியவர் குனிவரு திண் சிலைக்குமரர் - எல்லோர்க்கும்
இனிமையை அளிப்பவர்களும் வளைந்த வலிய வில்லையுடையவர்களுமான
இராமலக்குவர்;அனையவன் இறுதியின் அமைவு நோக்கலின் - அந்தச்
சரபங்க முனிவரின் முடிவின் நிலையைப்பார்த்தமையால்; இன்னலின்
இரங்கும் நெஞ்சினர் -
துன்பத்தால் வருந்தியமனமுடையவர்களாய்;
கொம்பொடும் - பூங்கொம்பு போன்ற சீதையுடன்; புனிதனது உறையுள்
நின்று அரிதின் போயினார் -
தூயவராம் அம்முனிவரின்
தவச்சாலையிலிருந்து துன்பத்தோடுநடந்து சென்றனர்.

     சரபங்கர் தீயில் புக்கு நல்லுலகம் அடைந்ததைப் பார்த்து இராமன்
முதலியோர்வியப்பெய்தினர் என்பர் வால்மீகி. இங்குக் கம்பர் அந்நிலையைத்
துன்பச் சூழலாகக்காட்டுகிறார். தீப்புகு காட்சி, யாவர் மனத்தையும் கலங்கச்
செய்வதாம். உறையுள் -இருப்பிடம், அரிதிற் போயினார் - அம்முனிவரின்
பிரிவால் வருந்திச் சென்றனர் எனலுமாம்.கொம்பு - உவமையாகுபெயர்.   1