இராமன் தண்டக வனத்திற்கு வர, முனிவர்கள் மகிழ்தல் 2633. | பண்டைய அயன் தரு பாலகில்லரும், முண்டரும், மோனரும், முதலினோர்கள் அத் தண்டக வனத்து உறை தவத்துளோர் எலாம் கண்டனர் இராமனை, களிக்கும் சிந்தையார். |
பண்டைய அயன் தரு பால கில்லரும் - முதன் முதலில் தோன்றிய பழமையான பிரமதேவன் பெற்றவர்களாகிய பாலகில்லரும்; முண்டரும் - மழித்த தலையை உடையவர்களும்; மோனரும் - மௌன விரதம் பூண்டவர்களும்; முதலினோர்கள் - முதலியவர்களாகிய; அத்தண்டக வனத்துறை தவத்துளோர் எலாம் - அந்தத் தண்டகாரணியம் எனும் காட்டில் வாழ்கின்ற முனிவர்கள் எல்லாம்; இராமனைக்கண்டனர் களிக்கும் சிந்தையார் - இராமனைப் பார்த்தவர்களாய் மகிழும் மனமுடையவர் ஆனார்கள். பாலகில்லர் - வாலகில்யர் பிரமனது மயிரிலிருந்து தோன்றியவர்கள்; அவனுடைய மாசனபுத்திரர்கள்; இவர்கள் அறுபதினாயிரவர் என்பர்; பெருந்தவம் புரிந்தவர்கள்; இவர்கள் கட்டைவிரல் அளவுள்ள குறுவடிவினர்; நாளும் கதிரவனின் இரதத்தை வலம் வந்து கொண்டிருப்பவர். மோனர்- மௌனர் என்பதன் போலி. களிக்கும் சிந்தையார் கண்டனர் எனவும் பொருள் முடிவுகொள்வர். 3 |