இராமனை முனிவர்கள் வாழ்த்தித், தம் அல்லலைக் கூறல் 2639. | எழுந்தனர், எய்தினர், இருண்ட மேகத்தின் கொழுந்து என நின்ற அக் குரிசில் வீரனை; பொழிந்து எழு காதலின் பொருந்தினார், அவன் தொழும்தொறும் தொழும்தொறும், ஆசி சொல்லுவார். |
எழுந்தனர் எய்தினர் - (அம்முனிவர்கள்) புறப்பட்டு அணுகி; இருண்ட மேகத்தின் கொழுந்து என நின்ற அக்குரிசில்வீரனை- கரிய மேகத்தின் கொழுந்து போல அங்கு நின்ற வீரனாகிய அந்த இராமனை; பொழிந்து எழு காதலின் பொருந்தினார் - பொங்கி எழும் அன்போடு அடைந்தார்கள்;(அப்போது); அவன் தொழும் தொறும் தொழும் தொறும் ஆசி சொல்லுவார் - அந்த இராமன்தம்மைத் தனித்தனியே தொழுது வணங்கும் போதெல்லாம் வாழ்த்தினார்கள். இராமன் எழுந்தருளியதைக் கேட்டதும் காலம் தாழ்த்தாது முனிவர்கள் வந்தமை தோன்ற'எழுந்தனர் எய்தினர்' என்றார். செயல் விரைவு தோன்றப் பாடும் நிலையை இராமன் வில்லை'எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார்' (699) என்பது போல இதுவும் குறிப்பால் உணர்த்தும்.திருஅவதாரப் படலத்தில் கோசலை இராமனைப் பெற்றெடுத்த போது 'கருமுகிற் கொழுந்து எழில்காட்டும் சோதியைத் திருவுறப் பயந்தனள்' (282) என்பார். கருமேகம் கைம்மாறு கருதாது அருள்செய்தற்கும் சான்றாம். இராமன் திருமாலின் அவதாரமாயினும் தானெடுத்த மானிடக்கோலத்திற்கேற்ப முனிவரை வணங்கினான் என்க. முனிவர்களும் பொங்கும் அன்பால் ஆசி அருளினர். 'தொழும் தொறும் தொழும்தொறும்' என்ற அடுக்கு, மிகுதிப் பொருளைக் காட்டும். குரிசில் - அரசகுமரன்.பெருமைக்குரியோனுமாம். 9 |