2651. | 'ஆவுக்கு ஆயினும் அந்தணர்க்கு ஆயினும், யாவர்க்கு ஆயினும், எளியவர்க்கு ஆயினும், சாவப்பெற்றவரே, தகை வான் உறை தேவர்க்கும் தொழும் தேவர்கள் ஆகுவார். |
ஆவுக்கு ஆயினும் - பசுக்களைக் காப்பதற்கானாலும்; அந்தணர்க்கு ஆயினும் - அந்தணர்களைக்காப்பதற்கானாலும்; எளியவர்க்கு ஆயினும்- ஏழைகளைக் காப்பதற்கானாலும்; யாவர்க்கு ஆயினும் - எவர்களைக் காப்பதற்கானாலும்; சாவப் பெற்றவரே - உதவிசெய்து அதனால் இறக்கப் பெற்றவர்களே; தகை வான் உறை தேவர்க்கும் தொழும் தேவர்கள் ஆகுவார் - பெருமை பொருந்திய விண்ணுலகில் வாழும் தேவர்களுக்கும் தொழுது வணங்கக்கூடியதேவர்களாக ஆவர். ஆ - பசு இது எல்லா உயிரினங்களிலும் புனிதமும் பயன் தருவதும் ஆதலால் எல்லாவற்றிலும் முன்வைக்கப் பெற்றது. "விடுநில மருங்கின் மக்கட்கெல்லாம், பிறந்த நாட் டொட்டுஞ் சிறந்ததன்தீம்பால், அறந்தரு நெஞ்சோடருள் சுரந் தூட்டும்" (மணிமே. ஆபுத்திரன் 51 - 54) என்பர். ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும் என்று புறநானுறும் (9) குறிக்கும் அடியோடு இதனை ஒப்பிட்டுக்காணத்தக்கது. எளியர் - மெல்லியர் என்ற பொருளில் பெண்டிரையும் குறிக்கும். இத்தகையோர்க்குஉதவி செய்வதால் இறந்தோர் தேவர்க்குள்ளும் சிறந்த தேவராவர். இப்படலத்தை அடுத்துச் சடாயுகாண்படலம் வருவதும் இப் பாடலின் பொருட் சிறப்பை எண்ணிப் பார்க்க இடம் தருகிறது. ஆயினும்என்பது எண்ணிடைச் சொல். 21 |