2653. | உரைத்த வாசகம் கேட்டு உவந்து ஓங்கிட, இரைத்த காதலர், ஏகிய இன்னலர், திரித்த கோலினர், தே மறை பாடினர்; நிருத்தம் ஆடினர்; நின்று விளம்புவார். |
உரைத்த வாசகம் கேட்டு - இவ்வாறு இராமன் கூறிய அபய மொழிகளைக் (அம்முனிவர்கள்) கேட்டு; உவந்து ஓங்கிட - மகிழ்ச்சிப் பெருக்கு மீதூர; இரைத்த காதலர் - பொங்கி எழுந்த அன்பினை உடையவர்களும்; ஏகிய இன்னலர் - துன்பத்தை நீங்கியவர்களும்; திரித்த கோலினர்- (கையால்) சுழற்றிய தண்டங்களை உடையவர்களும்; தேமறை பாடினர் - தெய்வத்தன்மைவாய்ந்த வேதங்களைப் பாடினவர்களும்; நிருத்தம் ஆடினர் - கூத்தாடினவர்களுமாகி; நின்று விளம்புவார் - இராமன் முன்நின்று கூறுவார்கள். இரைத்த - மேலோங்கி ஒலித்த என்றுமாம். ஏகிய இன்னலர் என்ற தொடரை 'அருங்கேடன்'என்பது கோலக் கொள்க. இன்னல் ஏகியவர் எனப் பிரித்துக் கூட்டுவாரும் உளர். கோல்திரித்தல், மறை பாடல், நிருத்தமாடல் என்பவை பெருமகிழ்வு கொண்ட நிலையைக் காட்டும்'ஆடினர், பாடினர், அங்கும் இங்குமாய் ஓடினர்; உவகைமா நறவு உண்டு ஓர்கிலார்' (193) எனப் பாலகாண்டத் திரு அவதாரப் படலவரி இந்நிலையைக் காட்டும். கோல் முனிவர்க்குரிய திரிதண்டம்அல்லது ஏக தண்டம். தேமறை என்பது இனிய வேதம்என்பர். 23 |