2655. | 'அன்னது ஆகலின், ஏயின ஆண்டு எலாம், இன்னல் காத்து இங்கு இனிது உறைவாய்' எனச் சொன்ன மா தவர் பாதம் தொழுது, உயர் மன்னர் மன்னவன் மைந்தனும் வைகினான். |
அன்னது ஆகலின் - (நின் பெருமை) அத்தகைய தாயிருத்தலால்; ஏயின ஆண்டு எலாம் - (நீ காட்டில்இருக்குமாறு) அமைந்த ஆண்டுகள் எல்லாம்; இன்னல் காத்து இங்கு இனிது உறைவாய் - எங்களுக்குத் துன்பம் வராமல் காத்து இந்தத் தவ வனத்தில் இனிது மகிழ்ந்து வாழ்வாயாக; எனச் சொன்ன மாதவர் பாதம் தொழுது - என்று கூறிய பெருந்தவ முனிவர்களின் அடிகளை வணங்கி;உயர் மன்னர் மன்னவன் மைந்தனும் வைகினான் - சிறந்த அரசர்க்கரசனாகிய தயரதசக்கரவர்த்தியின் மகனாம் இராமனும் தங்கியிருந்தான். ஏயின - சிற்றன்னை கைகேயி ஏவினை என்றுமாம். இன்னல் காத்து என்பது துன்பம் வராமல்தடுத்தல். உயர் என்ற அடையை மன்னர்க்கும், மன்னவனுக்கும் மைந்தனுக்கும் கூட்டிப் பொருள்காணலாம். மைந்தனும் என்று கூறியதால் சீதையும் இலக்குவனும் வைகினர் என்பது தானே பெறப்பட்டது. 25 |