அகத்தியன் பால் செல்லும் இராமனைச் சுதீக்கணன் உபசரித்தல்

2657.விடரகங்களும், வேய்
     செறி கானமும்,
படரும் சில் நெறி
     பைப்பய நீங்கினார்;
சுடரும் மேனிச் சுதீக்கணன்
     என்னும் அவ்
இடர் இலான் உறை சோலை
     சென்று, எய்தினார்.

    விடரகங்களும் - மலை வெடிப்புள்ள பள்ளங்களிலும்; வேய் செறி
கானமும் -
மூங்கில்கள் அடர்ந்தகாடுகளிலும்; படரும் சில் நெறி
பைப்பய நீங்கினார் -
தொடர்ந்து செல்லும் சிறிய வழிகளை மெல்ல
மெல்லக் கடந்து சென்று; சுடரும் மேனிசுதீக்கணன் என்னும் - ஒளி
வீசும் மேனியை உடைய சுதீக்கணன் என்னும்; அவ் இடர்இலான்உறை
சோலை சென்று எய்தினார் -
துன்பங்களற்ற அந்த முனிவர் வாழும் தவச்
சோலையைப்போய் அடைந்தனர்.

     காட்டின் வழியை விடரகங்களும், வேய் செறி கானமும் படரும் சில்
நெறி எனவும்விளக்கினார். சுதீக்கணன் - உக்கிரமான தவமுடைமையால்
பெற்ற காரணப் பெயர். தவச் செறிவால்உடல் ஒளிமயமாயிருந்தது. தவத்தால்
மெய்யுணர்வுற்று, இருவகைப் பற்றறவே பிறவித் துன்பம்நீங்கியதால் 'இடர்
இலான்' என்றார். சுதீக்கணன், பைப்பய என்பனவிகாரங்கள்.           27