2659. | வைகும் வைகலின், மாதவன், மைந்தன்பால் செய்கை யாவையும் செய்து, 'இவண், செல்வ! நீ எய்த யான் செய்தது எத் தவம்?' என்றனன்; ஐயனும், அவற்கு அன்பினன் கூறுவான். |
வைகும் வைகலின் - (அவ்வாறு) தங்கியிருக்கும் பொழுது; மாதவன் - பெருந்தவம் செய்த சுதீக்கணன்; மைந்தன் பால் - இராமனிடத்தில்; செய்கை யாவையும் செய்து - செய்ய வேண்டிய உபசாரங்கள் எல்லாவற்றையும் செய்து; 'செல்வ! இவண் நீ எய்த யான் செய்தது எத்தவம்?'என்றனன் - செல்வமுடையவனே! இங்கு நீ எழுந்தருளும் படி நான் செய்தது எத்தகையதவமோ என்று சொன்னான்; ஐயனும் அவற்கு அன்பினன் கூறுவான் - இராமனும் அம்முனிவனுக்கு அன்புடையவனாய்ச் சொல்லுவான். வைகல் - வேளை என்றுமாம் செல்வன் - அரசச் செல்வமுடையவன்; இம்மை மறுமை மோட்சச்செல்வங்களை அருள்பவன் என்றுமாம். தம்மிடம் வந்தவரிடம் இன்மொழி பேசி மகிழ்வுறச்செய்தல் தலையாய செய்கையாம். 29 |